ஒரு வாசகனின் மனப்பதிவுகள்

Monday, April 11, 2005

விடை பெறுகிறேன். . . .வேதனையுடன்!

சிறிது நாள்களாகவே எனக்கு ஒரு கவலை இருந்து வந்தது. தமிழ் மணத்தில் வாசிக்கக் கிடைக்கிற வலைப்பதிவுகள் தந்த கவலை அது. தமிழ் வலைப்பதிவுகள் நம்பிக்கையும், கவலையும் ஒரு சேர ஊட்டுவனவாக இருந்து வருகின்றன. சில நேரங்களில் கவலைகளை நம்பிக்கைகள் வென்று விடும். சிலநேரம் கவலைகள் நம்பிக்கைகளைக் கொன்று விடும்.நோயும் மருந்தும் போல. கடைசியில் நோய் வென்று விட்டது.

70களின் மத்தியில் இலக்கியச் சிற்றேடுகளில் நிலவியதைப் போன்ற ஓர் கலாசாரம் இன்று தமிழ் வலைப்பதிவுகளில் நிலவுவதைப் போல ஒர் உணர்வு எழுகிறது.அந்தக் கலாசாரம் இலக்கியச் சிற்றேடுகளுக்கு என்ன பின்விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை அறிந்தவன் என்பதாலும், அத்தகையதொரு விளைவு தமிழ் வலைப்பதிவுகளுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது எனக் கருதுவதாலும் கவலை ஏற்படுகிறது.

வலைப்பதிவர்களில் பலர் இளைஞர்களாக இருப்பதால் 70களின் மத்தியில் நிலவிய சிறுபத்திரிகைக் கலாசாரம் என்னவென்று தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு. அவர்களுக்குப் புரிவதற்காக கசடதபறவை உதாரணமாகக் கொண்டு சொல்கிறேன். அந்த சிற்றிதழில் ஒரு புறம் சோல்ஷனிட்ஸன் பற்றிய ஓர் தீவிரமான ஆய்வுப் பார்வையில் எஸ்.வி.ராஜதுரை எழுதிய கட்டுரையோ, அல்லது அம்பை தனது படைப்பாற்றலின் உச்சத்தில் எழுதிய அம்மா ஒரு கொலை செய்தாள் கதையோ இடம் பெற்றிருக்கும். இன்னொருபுறம் வெ.சாமிநாதனின் அல்லது வெ.சா. மீதான எள்ளல்கள், வசைகள், சாடல்கள் இடம் பெற்றிருக்கும்.

அன்றைய சிறு பத்திரிகைகளின் கலாசாரத்தை சுருக்கமாக இப்படிப் பட்டியலிடலாம்:
* நியோ நார்சிசம்: அதாவது தன்னைத்தானே வியந்து கொள்ளல்.
* வீர வணக்கம்: தனக்கு உவந்த ஒரு எழுத்தாளரை அல்லது ஒரு கருத்தியலை, வழிபாட்டு நிலையில் அணுகுவது அல்லது பீடத்தில் ஏற்றி வைத்துக் கும்பிடுவது. அந்த நபரை/ கருத்தியலை விமர்சிப்பவர்களை எதிரிகளாக எண்ணி இகழ்ந்துரைப்பது, ஏளனம் செய்வது, அல்லது வசை பாடுவது
*வசைத் தொற்று: ஒரு இதழில் எழுதப்பட்ட கருத்து குறித்து அந்த இதழுக்கே தனது மாற்றுக் கருத்துக்களை எழுதி அங்கே ஓரு விவாதக் களனை உருவாக்காமல், வேறு ஒரு சிறு பத்திரிகைக்கு எழுதி, சச்சரவைப் பரப்புவது. கசடதபறவில் அசோகமிரன் எழுதிய கட்டுரைக்கு பதில் அஃக்கில் வரு, அஃகில் வந்ததற்கான கருத்து கொல்லிப்பாவையில் வரும். கொல்லிப்பாவைக்குத் தொடர்ச்சி இலக்கிய வட்டத்தில் வரும். இப்படி. இதன் காரணமாக மொத்த சூழ்லையுமே ஒரு பூசலிடும் மனோபவத்தில் வைத்திருப்பது

*துச்ச மொழி: இலக்கிய ஊழல், நபும்சகம், பேடிகள், விசிலடிச்சான் குஞ்சுகள் எனக் கடுமையான வசைமொழிகளை, குற்றம் சாட்டப்படுபவரின் மற்ற தகுதிகள், படைப்பாளுமை இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் அள்ளி வீசுவது. உதாரணத்திற்கு தினமணிக் கதிர் ஜெயகாந்தனின் ரிஷி மூலம் கதையைப் பாதியில் நிறுத்தியது. அதே போல சில வருடங்கள்கழித்து இந்திராபார்த்தசாரதியின் திரைகளுக்கு அப்பாலும் பாதியில் நிறுத்தப்பட்டது. இபா தனது அனுபவம் குறித்து கணையாழியில் எழுதினார். அதைத் தொடர்ந்து கசடதபறவில் வெ.சா எழுதினார். அதைக் கேள்விப்பட்ட ஜெ.கா, இப்போது இவ்வளவு கூச்சல் போடுகிறவர்கள், என் கதை நிறுத்தப்பட்ட போது எங்கே போயிருந்தார்கள்? என தன் நண்பர்களிடம் அங்கலாய்த்துக் கொண்டார்.அந்த வேளையில் அ.மி. அழவேண்டாம், வாயை மூடிக் கொண்டிருந்தால் போதும் என ஒரு கட்டுரை வெ.சாவிற்கு பதில் சொல்வது போல எழுதினார். அதைத் தொடர்ந்து வெ.சாவின் இலக்கிய ஊழல்கள் என்ற பிரசுரம் வெளியாயிற்று. அதில் ஜெ.கா, அ.மி எல்லோருக்கும் அர்ச்சனை நடக்கும். அந்தப் பிரசுரத்தில் இந்தச் சொற்கள் தாராளமாக இறைக்கப்பட்டிருக்கும்.
* குழிப் பிள்ளையைத் தோண்டி அழுதல்: என்றோ நடந்து முடிந்த ஒரு சம்பவத்தை இன்றைய சர்ச்சையில் ஒரு பாயிண்ட்டாகப் பயன்படுத்துதல். எதிரி அதற்கு விளக்கமளிக்க முற்படுவான். கவனம் அங்கே திரும்பும். பேசவந்த பிரசினை பின் தள்ளப்பட்டுவிடும்.

*திரிப்பு: வேறு ஏதோ ஒரு சூழ்நிலையில் சொல்லப்பட்ட கருத்தை அந்த context ஐ மறைத்துவிட்டு தன் வசதிக்குத் தக்கவாறு பயனபடுத்திக் கொள்ளல்.

சுருக்கமாகச் சொன்னால், ஒரு சிவில் சமூகத்தில், விவாதங்களில் எவையெல்லாம் பின்பற்றத் தகாத மரபுகளோ அவையெல்லாம், பொதுவாக, அப்போது சிறு பத்திரிகைகளின் விவாதங்களில் பின்பற்றப்பட்டன. இதன் பின் விளைவு என்பது எல்லோரும் கூச்சலிட்டுச் சண்டையிட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி, சக்தி இழந்து கசப்புணர்வுடன் வீழ்ந்தனர். 70 களில் ஏராளமான சிறுபத்திரிகைகள் இருந்தன;80களில் சிறு பத்திரிகை இயக்கம் நைந்து நூலாகின.

இதே போன்ற ஒரு திசையை நோக்கி வலைப்பதிவுகள் நடக்கின்றன என நான் அஞ்சுகிறேன். இல்லை என மறுப்பவர்கள் அண்மையில் நட்ந்த விவாதங்களில் மேலே சொல்லப்பட்டுள்ள அம்சங்கள் காணப்பட்டனவா இல்லையா என பரிசீலித்துப் பாருங்கள்.

எல்லாப் பதிவுகளுமே அப்படி இருக்கின்றன என்று நான் சொல்லவரவில்லை. தங்கமணி, சுந்தர மூர்த்தி, வெங்கட் போன்றவர்கள் விவாதங்களை, மேலே சொன்ன நோய்க்கூறுகளிலிருந்து விடுவித்து அறிவார்ந்த ஒரு முயற்சியாக மாற்ற பெரும் பிரயத்தனப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இந்த நோய்க்கூறான மனோபாவங்களை உணர்ந்து கொள்கிறவர்கள் கூட, ' நமக்கேன் வம்பு' என்று ஒதுங்கி நிற்கிறார்கள்.

இன்று சச்சரவாளர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆரம்பத்தில் கான்சர் செல்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். நாட்செல்லச் செல்ல அவை மற்ற புலன்களின் திறனைக் குறைத்துவிடும்.

இது போன்ற சிந்தனையில் நான் இருந்த போது, பி.கே.சிவகுமார் தனது வலைப்பதிவில் என்னைப் பற்றி எழுதியிருந்த ஒரு பதிவு என் கவலைகளை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது. திசைகள் ஏப்ரல் இதழில் வெளியிட்டிருந்த மாலன் படைப்புலகம் கருத்தரங்கம் பற்றிய ரிபோர்ட்க்கு அவர் எதிர்வினை ஆற்றியிருந்தார்.

அவர் எதிர்வினை ஆற்றியது குறித்து எனக்கு வருத்தமோ, கோபமோ இல்லை. ஆனால் அதற்கு அவர் பயன்படுத்தியிருக்கும் மொழி, அந்தக் கட்டுரையின் sub-text, எனக்கு வருத்தமளிக்கிறது.

திசைகளின் அந்தக் கட்டுரை, அந்தக் கருத்தரங்கமே, காலச்சுவடில் வெளியான ஒருவரது விமர்சனத்திற்கு வைக்கப்பட்ட பதில் என்பதைப் போல தோற்றம் உருவாக்கப்படுகிறது. காலச்சுவடு விமர்சனத்தின் தலைப்பு: லட்சியத்தில் விழுந்த ஓட்டைகள். சிவகுமார் திசைகள் பற்றிய தனது பதிவிற்கு வைக்கும் தலைப்பு: ஓட்டையை மறைக்கும் லட்சியங்கள்.
உண்மையில் காலச்சுவடு விமர்சனத்திற்கும் கருத்தரங்கிற்கும் தொடர்பு இல்லை. கருத்தரங்கம் நடைபெற்றது மார்ச் 14ம் தேதி. காலச்சுவடு வெளியானது ஏப்ரல் முதல் வாரத்தில். காலச்சுவடில் என்ன வரப்போகிறது என்று எனக்கு எப்படியே முன் கூட்டியே தெரிந்திருக்க முடியும்?

திசைகள் கட்டுரையில் ஏன் புகழுரைகளே காணப்படுகின்றன என்று சிவகுமார் கேட்கிறார். நியாயமான கேள்வி. ஆனால் அதைக் கேட்கும் முன் விமர்சனமாகக் கருத்தரங்கில் பேசப்பட்டதா என்று அவர் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். எனக்கே கூட எழுதித் தெரிந்து கொண்டிருக்கலாம். அல்லது திசைகள் கட்டுரைக்கான எதிர்வினையாக, திசைகளுக்கே எழுதி இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கலாம். இதையெல்லாம் விட்டு எள்ளல் மொழியில் தன் பதிவில் இந்தக் கேள்வியை எழுப்புகிறார்.

அவர் என் நூல்கள் மீதான கால்ச்சுவடின் விமர்சனத்தை வெளியிட விரும்பியிருந்தால் அதை நேரடியாக வெளியிட்டிருக்கலாம். திசைகளை இழுக்க வேண்டியதில்லை. அப்படியே அவர் திசைகளைப்பற்றி எழுத வேண்டும் என்றாலும் இந்த மொழியை உபயோகித்திருக்க வேண்டியதில்லை.

கருத்தரங்கில் நான் உவப்பாக ஏற்புரை அளித்ததாக சொல்லி அதே போல காலச்சுவடின் விமர்சனத்திற்கும் பதில் சொல்வேனா என்று வினவுகிறார். நான் என் நூல்களைப் பற்றி எழுதப்படும் எந்த விமர்சனத்திற்கும் பதில் சொன்னதில்லை. அப்படி சொல்வது பண்பாடல்ல. விமர்சனம் என்பது ஒரு கருத்து. ஒருவரது கருத்து. அவ்வளவுதான். அதற்கு மேல் அதற்கு வேறு significance இல்லை. ஒரு கூட்டத்தில் ஏற்புரை வழங்குமாறு அழைக்கப்பட்டால் அந்த அழைப்பை ஏற்று சில வார்த்தைகள் சொல்வது என்பது வேறு. அது ஒரு சபை நாகரீகம். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் கூடவா சிவக்குமாருக்கு தெரியாது? அந்த இடத்தில் சிவக்குமார் என்ற கபட சந்நியாசி வெளிப்படுகிறார்.
இன்னொரு இடத்தில், ' எமெர்ஜென்சியையே எதிர்த்தவர்' என்று நக்கல் செய்கிறார். நான் எமெர்ஜென்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தேன் என்பது பதிவு செய்யப்பட்ட ஒன்று. எமர்ஜென்சியையே என்பதில் உள்ள ஏகாரம் அவர் செய்யும் ஒரு திரிப்பு. நான் எமெர்ஜென்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தேன், ஜெயகாந்தன் போல அதற்கு ஜால்ரா போடவில்லை. நான் எழுதிய கதை பாலத்தில் வெளியானது. நான் எழுதிய கவிதை கணையாழியில் வெளி வந்தது. அதை ஆங்கிலத் தொகுப்பிற்காக தேர்ந்தது நான் அல்ல. டஃப்ட் பல்கலை பேராசிரியர் ஆலிவர் பெர்ரி. அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் தமிழவன். இத்தனை சான்றுகள் இருக்கின்றன. இதில் எதற்கு எள்ளல்?

நான் பொய் சொல்கிறேன் என்பதைப் போல ஒரு இடத்தில் எழுதுகிறார். ஒரு இடத்தில் நான் என்னைப் பற்றிய தவறான அல்லது மிகைப்பட்ட பிம்பங்களை இணையத்தில் உருவாக்குகிறேன் என்கிறார். இவையெல்லாம் அபாண்டமான குற்றச்சாட்டுக்கள். நான் என் பதிவுகளில் என்னைப் பற்றிய விபரங்களையோ, படங்களையோ, சுயசரிதைகளையோ வெளியிட்டுக் கொண்டதில்லை. திசைகள் தவிர வேறு மின்னிதழ்களில் எழுதுவது இல்லை. திசைகளில் பொதுப் பிரசினைகள் பற்றி எழுதியிருக்கிறேன். என்னைப் பற்றி எழுதியதில்லை. நான் கலந்து கொண்ட விழாக்களைப் பற்றிய செய்திகளைக் கூட மற்ற வலைப்பதிவாளர்கள் தங்கள் பதிவுகளில் எழுதியவற்றை, அல்லது நாளிதழ்களில் வெளியானவற்றைத்தான் பிரசுரித்திருக்கிறேன். என் நூல்களைப் பற்றி பாராட்டி எழுதிய விமர்சனங்கள் பல பத்திரிககைகளில் வந்திருக்கின்றன. அவற்றை மீள் பிரசுரம் செய்ததில்லை.
இணையம் என்பது ஒரு சிறு வெளி. அதில் இருப்பவர்கள் இணையத்தை மட்டும் படிப்பவர்கள் அல்ல. வெளி உலகப் பழக்கமும் உள்ளவர்கள். அவர்கள் என்னை அவற்றின் மூலம் ஏற்கனவே அறிந்தவர்கள்தான். எனவே எனக்கு பிம்பங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

எழுத்துத் திறமை இல்லாத என்னை சன் டிவி போஷிக்கிறது என்பதைப் போல ஓரிடத்தில் எழுதுகிறார் ( வஞ்சப் புகழ்ச்சியாக) எனக்கு எழுத்துத் திறமை இல்லை என்றே வைத்துக் கொள்வோம். அதில் என்ன அவமானம். எல்லா மனிதர்களுக்கும் எழுதும் திறமை இருக்க வேண்டுமா என்ன? ஒரே நேரத்தில் என்னை, என்னைப் பிரசுரித்த பத்திரிகைகளை, அதன் ஆசிரியர்களை, அதன் வாசகர்களை அவமானம் செய்கிறார்.

சிவக்குமார் இப்படித் தனிப்படக் காழ்ப்பு உமிழ என்ன காரணம்? Malice! நான் ஜெயகாந்தனை விமர்சித்தது. அவரால் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மனிதனாகக் கருதப்பட்டு வழிபடப்படும் ஜெயகாந்தனை விமர்சித்ததை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் இதை இன்று மறுக்கலாம். ஆனால் அதற்கான சாட்சியங்கள் அவர் பதிவில் இருக்கின்றன. சினிமா நட்சத்திரத்தின் ரசிகன் படம் சேகரிப்பது போல ஜெகேயை வியந்து எழுதுகிற கட்டுரைகளைத் தொகுக்கிற செயலில் இருக்கிறது.

என்னுடைய எழுத்துக்களை நான் இணையத்தின் மூலம்தான் வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. வலைப்பதிவுகளில் எழுதித்தான் நான் கவனம் பெற வேண்டும் என்ற நிலை இல்லை.
மிகப் பெருமிதத்தோடு சொல்கிறேன்: நான் என் சிறுகதைகளில் தொட்டு எழுதிய விஷயங்களை என்னுடைய சமகாலத்தவர் எவரும் எழுதியதில்லை. அது வைக்கிற தர்க்கங்களை யாரும் வைத்ததில்லை. சான்றுகளும் தெம்பும் இருப்பவர் மறுக்கலாம்

தமிழிலும் வலைபதிக்க முடியும் என்பதை தமிழ் இணைய வாசிகளுக்கு மெய்ப்பிக்கும் பொருட்டே நான் வலைப்பதிவுகளில் அக்கறையும் கவனமும் செலுத்தி வந்தேன். திசைகளைப் படித்து வலைபதிய வந்ததாக பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது கூட நான் என் பிம்பங்களைத் தயாரிப்பதற்காக மேற்கொள்லும் ஒரு முயற்சி எனத் திரிக்கப்படும் அபாயம் இருக்கிறது என உணர்கிறேன்.

எனவே இனி வலைப்பதிவுகளில் எழுதுவது இல்லை, அவற்றைப் படிப்பதில்லை என முடிவு செய்திருக்கிறேன்.

வலைப்பதிவுகளில் தேர்ந்தவற்றை வாராவாரம் வெளியிடும் பணி இன்னும் ஓர் இரு வாரங்கள் தொடரும். பின் அதுவும் நிறுத்தப்படும்.

வலைப்பதிவுகளில் சிறந்தவற்றிற்குப் பரிசளிப்ப்பதாக திசைகள் அறிவித்த திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லை. அவற்றைத் தேர்ந்தெடுத்துத் தர இசைந்துள்ள நடுவர் குழுவின் முடிவுகளை திசைகள் மதிக்கும்.

இந்தச் சிறு மின் வெளியில் என் மீது நேசம் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி. அவர்களை என்றும் நினைவில் கொள்வேன்.

தமிழில் வலைப்பதிவுகளைத் துவக்கவும், அவை பற்றி சிந்திக்கவும் தூண்டிய பத்ரிக்கு சிறப்பாக நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் வலைப்பதிவுகளிலிருந்து வெளியேறக் காரணமான திரு.பி.கே. சிவக்குமாருக்கும் நான் நன்றி சொல்கிறேன். இனி என் தங்க 180 நிமிடங்களை ஆக்கபூர்வமாக வேறு எங்கோ செலவிட முடியும். அதற்காக அவருக்கு நன்றி.

வேதனையுடன்,
மாலன்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, April 10, 2005

இன்னொரு ஆலமரத்தின் கதை

இது பத்ரியின் பின்னூட்டத்தில் நான் குறிப்பிட்டிருந்த ஆங்கிலக் கட்டுரை.

Tale of Two Banyan Trees

Maalan

Many morning walkers strolling past the grand old banyan tree in the wooded Theosophical Society at Adyar may not know a great political movement that changed the course of history of India was born under its shade. Alan Octavian Hume, a former British Civil Servant but remembered in history as the founder of Indian National Congress was a staunch Theosophist. In 1885, during a discussion with his friends from Mylapore, under the banyan tree, he first mooted the idea of Congress.

Thirty years later the same banyan tree and history stood witness to the birth pangs of another political movement, Home Rule. Dr. Annie Besant , described bitterly by her rivals as a ’woman of deep penetration, quick conception and easy delivery’ held consultations with her colleagues, under the great banyan tree, for a movement that would like ’India to be a sovereign nation within her own boundaries owing only allegiance to the imperial crown’

New generation Congressmen may not remember. But history acknowledges that it was Dr.Besant, who played a pivotal role in reunifying the Moderate and the Extremist factions of the then Congress, which had split at the Surat sessions. Madras was the venue for this reconciliation.

Dr.Besant’s political maneuvers sowed seeds for another banyan tree- the Justice Party- at the other side of the bank. Prof.Eugene.F. Irsschick of University of California at Berkeley, (who was born and had his early education in Tamilnadu) observes, ‘the catalyst which triggered the formation of the Justice Party was the foundation by Annie Besant of the home rule movement’.

Justice Party, the mother of all later day Dravidian movements had its genesis in Madras Dravidian Association, founded by Dr.C.Natesa Mudaliar of Triplicane. A significant task of the Dravidian Association was the running of the hostel for non-Brahmin students at Akbar Sahib Street in Triplicane. This was a long felt need at that time, as students who moved from districts to pursue higher studies at the city colleges were not served food at Brahmin hotels. Hundreds of lilies bloomed from this Thiruvallikeni hostel, the most prominent among them were Justice Subramania Nadar who rose to the position of a judge at Madras High Court and Dr.T.M. Narayanaswami Pillai who later became the Vice-Chancellor of Annamalai University.

Congress and Dravidian movements have molded the mindset of millions of Tamils over many decades. If Tamils are what they are today, they owe it primarily to these political movements. But what is not said often is the role played by the Dravidian movements in steering the destiny of the nation. Dravidian political leaders, described merrily as regional chieftains by the national news papers, foresaw quite early, the course of national politics. They predicted the end of confrontational politics and the beginning of the era of multi -party coalitions as early as in 1980, when DMK and Congress, the arch rivals forged an alliance to face the Parliament elections. In this backdrop, the launch of National Front, a political formation that led the country under Mr.V.P.Singh, at Chennai on September 18, 1988 is no surprise.

Chennai has been regarded as a cultural capital by many for many years. But it has been a political hub as well and history stands testimony to this claim.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, March 08, 2005

வலைபூக்களால் தூக்கம் போச்சு!

பதிவுகளில் எதைப்பற்றியெல்லாம் எழுதலாம் என்று நட்சத்திரப் பதிவாளர் அருணா தனது பதிவில் தந்துள்ள பட்டியலில் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பதிவுகளில் பதிவுகளைப்பற்றியும் பதியலாம்!
பின்னூட்டங்கள் பற்றி ஒரு வார்த்தை: ஒரு சாதாரண மனிதனுக்கு இணையத்தில் சொந்த வேலைகளைப் பார்க்கக் கிடைக்கிற நேரம் அதிக பட்சமாக மூன்று மணி நேரம். அலுவலகம் போகும் வரும் நேரத்தையும் சேர்த்து ஒரு பத்துமணி நேரம் வேலையில் போய்விடுகிறது. தூங்குவதில் 8 மணிநேரம். மீதமிருக்கும் 6 மணி நேரத்தில் உடல், மன ஆரோக்கியத்திற்காக (நடை, படிப்பு, குளியல் போன்ற சொந்த hygiene விஷயங்களுக்காக இரண்டு, மூன்று மணி நேரம் தேவைப்படுகிறது) மீதமுள்ள மூன்று மணி நேரத்தில்தான் இணையம் உள்பட பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது. இந்த மூன்று மணி நேரத்தை நான் Goldern 180 என்று சொல்வதுண்டு. தூங்குவதைக் குறைத்துக் கொண்டால் இதை நீட்டிக்கலாம்தான். ஆனால் ஒரு இரவு ஒரு மணிநேரம் தூங்குவதைத் தள்ளிப் போட்டால் மறுநாள் அந்த ஒருமணி நேரத்தை எப்படியாவது உடல் கேட்டு வாங்கிக் கொண்டு விடுகிறது.
குடும்ப உறவுகள், நட்பு வட்டம் இவற்றைப் பேண சில சமயம் இந்த 3 மணி நேரத்தைக்கூட விட்டுக் கொடுக்க வேண்டி வந்து விடும்.

ஆனால் இந்த golden 180ல்தான் பலர் பல அற்புதங்களை செய்கிறார்கள். காசி தமிழ்மணத்தை ஒரு குழந்தை போல் பேணி தினம் தினம் அதை விதவிதமாக அலங்கரித்துப் பார்க்கிறார். சுரதா எழுத்துரு மாற்றி செய்து தருகிறார்.மதி படிக்கிறார், படம் பார்க்கிறார், எழுதுகிறார். பா.ராகவன் தலையணை தலையணையாக உலக அரசியல் சரித்திரம் எழுதுகிறார். வெங்கடேஷ் நேசமுடன் மடல் வரைகிறார்.மனுஷ்யபுத்ரன் கவிதைகள் புனைகிறார். அருண் வைத்தியநாதன் குறும்படம் தயாரிக்கிறார். சுபா கணினி, சங்கீதம், பயணம், புகைப்படம், மரபு அறக்கட்டளை, ஆரக்கிள், பி.எச்டி என்று ஏழெட்டு வேலைகள் செய்கிறார். இன்னும் பலர் என்னென்னவோ செய்கிறார்கள்.

இதில்தான் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு வலைப் பதிவில் எழுதுகிறார்கள். பின்னூட்டம் இடுகிறார்கள்.

எழுதுவதன் நோக்கம் திசைகளின் நோக்கம்தான் அதாவது "அறிதல் ஆக்கல் பகிர்தல்". ஆக்கத்திற்கும் பகிர்விற்கும் முதுகில் சின்னதாக ஒரு ஷொட்டு அல்லது தலையில் ஒரு குட்டு கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கிறது. கிடைக்காவிட்டால் ஏமாற்றம் ஏற்படுகிறது.அது மனித சுபாவம்.

ஆனால் சில சமயங்களில் பின்னூட்டங்கள் வெறும் அரட்டைக் கச்சேரியாகப் போய்விடுகின்றன. அசோகமித்ரன் என்ற எழுத்தாளர் 50 ஆண்டுகளை எழுத்துலகில் நிறைவு செய்ததை ஒட்டி ஒரு விழா. தமிழின் 'சிந்தனை டாங்கிகள்' (donkeyகள் அல்ல, tanks) பேசுகிறார்கள். அதை ரிபோர்ட் செய்து பத்ரி எழுதுகிறார். ஆனால் பத்ரி அணிந்து வந்தது அரைக்கால் சட்டையா முழுக்கால் சட்டையா, அது அரைக்காலா, அரைக்கையா இப்படித் திரும்பிவிடுகிறது பின்னூட்டங்கள்! அசோகமித்ரனின் 50 ஆண்டுகள், அரை நொடியில் காணாமல் போய்விடுகிறது. குறைந்த பட்சம் அவர் சோக மித்ரனா அல்லது அ-சோக மித்ரனா என்று தனிப்பட ஆராய்ந்தால் கூடப் பரவாயில்லை. இது ஓர் உதாரணம்தான்.

இது போன்ற பின்னூட்டங்களைப் படிக்கும் போது, ம்...கொடுத்து வைத்த மகராஜன்கள்/ மகராணிகள், எங்கிருந்துதான் இவர்களுக்கு நேரம் கிடைக்கிறதோ என்று மிட்டாய்க்கடையைப் பார்த்த பிச்சைக்காரக் குழந்தை மாதிரி ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டு நகர்ந்து விடுவேன்.

இந்த மாதிரி ஒவ்வொருவருக்கு ஒரு காரணம் இருக்கும். எனவே பின்னூட்டம் இல்லாத பதிவெல்லாம் படிக்கப்படாத பதிவுகள் என்றெண்ணிச் சோர்ந்து விட வேண்டாம்.

மற்றெந்த மொழி வலைப்பதிவுகளைக் காட்டிலும் தமிழ் வலைப்பதிவுகளுக்கு சில தனிப்பட்ட சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. அவற்றிலொன்று அவையெல்லாம் ஒரே இடத்தில் திரட்டப்படுவது. அதனால் அநேகமாக எழுதப்படுவதெல்லாம் படிக்கப்படுகின்றன.

400வது பதிவாக காசி தனது பதிவை ஆரம்பித்தபோது எல்லோரும் ஏக மனதாக சீக்கிரமே 1000வது பதிவு வரட்டும் என்று ஆசீர்வதித்தார்கள். 1000 பதிவு வந்து அதில் பாதி அளவாவது தினமும் எழுதப்பட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்.

Golden 180 போதாது. எனவே-

தூக்கம் போச்சு!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Monday, March 07, 2005

பூந்தோட்டத்திற்கு வாருங்கள்

இந்த மார்ச் மாதம் திசைகள் தனது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைத்தது. இதையொட்டி தமிழ் வலைப்பூக்களிலிருந்து தேர்ந்தெடுத்த சில சுவையான செறிவான, சூடான பகுதிகளளைஇந்த மார்ச் மாதத்திலிருந்து வாரந்தோறும்.. ஒவ்வொரு திங்கள் கிழமையும் வாசகர்களுக்கு வழங்க இருக்கிறோம் என பிப்ரவரி மற்றும் மார்ச் இதழ்களில் அறிவித்திருந்தோம்.

இன்று முதல் பூந்தோட்டம் என்ற பெயரில் அந்தப் பகுதி திசைகள் இதழில் ஆரம்பம் ஆகியுள்ளது. இன்று வெளியாகியுள்ள பகுதியில் மார்ச் 1 முதல் மார்ச் 5 வரையிலான பதிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை வாசிக்கலாம்.

இம்மாத திசைகளில், 'இந்த இதழில்' என்ற பக்கத்திற்கு சென்று பூந்தோட்டம் என்ற தலைப்பின் கீழ் சொடுக்கினால் அவற்றை நீங்கள் காணலாம்.

அல்லது கீழுள்ள முகவரிக்கு சென்றும் வாசிக்கலாம்.
http://www.thisaigal.com/march05/poonthotam.htmlவலைப்பதிவுகளின் வாசகப் பரப்பை விரிவாக்கும் ஆவலோடு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வலைப்பதிவாளர்கள் தங்கள் ஒத்துழைப்பை நல்கக் கேட்டுக் கொள்கிறேன்.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Thursday, March 03, 2005

ஹிந்தி கட்டுரை - என் தரப்பு என்ன?

எழுதியிருப்பதே போதும், இதற்கு மேலே என்ன சொல்ல இருக்கிறது அதனால் சும்மா இருந்து விடலாம் என்றுதான் நினைத்தேன்.ஆனால் நான்மிகவும் மதிக்கும் சுந்தரமூர்த்தி போன்றவர்களே இதைக் குறித்துக் கருத்துக்கள் தெரிவித்திருக்கும் நிலையில் சற்று விளக்கமாகவே பேசிவிடலாம் எனத் தோன்றுகிறது. இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையைப் பற்றித்தான் சொல்கிறேன்.

1.நான் என் கட்டுடரையில் எந்த இடத்திலும் இந்தி கற்றுக் கொள்வது என்பதற்கு வட இந்தியர்களுக்கு அடிமையாவது என்று அர்த்தமா? என்ற கேள்வியை நான் எழுப்பவே இல்லை. ஏனெனில் அடிமையாகிறோம் என்றுதான் அர்த்தம் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
2.பின் எப்படிக் குழப்பம் நேர்ந்தது? கட்டுரைக்குத் துணைத்தலைப்பிட்ட (துணை) ஆசிரியர் எழுப்பியிருக்கும் கேள்வி அது. நான் கட்டுரைக்குக் கொடுத்திருந்த தலைப்பு "மன்னிக்கவும் யாருடைய மொழியைப் பற்றி பேசுகிறீர்கள்?" (EXCUSE ME, WHOSE LANGUAGE YOU ARE TALKING ABOUT?) இந்தத் தலைப்பின் வெளிச்சத்தில் கட்டுரையைப் படித்தால் புதிய வெளிச்சம் கிடைக்கலாம்.

3.அச்சிதழில் வந்திருந்த இந்தத் துணைத்தலைப்பு இணையப் பதிப்பில் இல்லை.ஆனால் அந்தத் துணைத் தலைப்பை பத்ரி தன் பதிவின் தலைப்பாகக் கொடுத்துவிட்டார். அத்துடன் கட்டுரையைப் பற்றியோ, கட்டுரையின் சுருக்கத்தையோ அவர் தரவில்லை. அது குழப்பம் அதிகரிக்க வகை செய்துவிட்டது என நினைக்கிறேன்.

சுந்தரவடிவேல் கட்டுரையின் ஒரு பகுதியைத் தமிழில் தந்திருக்கிறார். நான் முழுவதுமாகத் தந்து விடுகிறேன். அதற்கு முன் அவர் பதிவில் மதுகிஷ்வர் யார் என்று கேட்டு இருந்தார். அதையும் சொல்லிவிட்டால் புரிந்து கொள்ள எளிதாக இருக்கும். மது கிஷ்வர் மனுஷி என்ற ஆங்கிலப் பெண்கள் இதழின் ஆசிரியர். இந்தியாவில் நன்கு அறியப்பட்ட பெண்ணியல்வாதி. ஆங்கிலப் பேராசிரியரும்கூட. அவரது தாய்மொழி இந்தி அல்ல. பஞ்சாபி.

இனி என் ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு:


" மது கிஷ்வர் ஓர் இந்தியப் பத்திரிகையாளர். ஒரு முறை பல்கலைக்கழகங்களில் உரையாற்ற அமெரிக்கா சென்றிருந்தார். இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து போகிற இடங்களில் எல்லாம் ஆங்கிலத்திலேயே பேசிக் கொண்டிருப்பது அலுப்பாக இருந்தது. அயல்நாட்டி வசிக்கும் இந்தியர்களுடன் அரட்டை அடைக்க ஒரு வாய்ப்புக் கிடைத்த போது உரையாடலில் இந்தி வாக்கியங்களையும் கலந்து பேசிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் அங்கிருந்தவர்களில் ஓர் இலம் பெண் கோபமாக இடைமறித்தார்:
"இதுதான் நான் உங்களைப் போன்ற வட இந்தியர்களிடம் வெறுக்கும் விஷயம். உங்கள் இந்தி வெறி!"
அந்த ஆக்ரோஷத்தைக் கண்டு பத்த்ரிகையாளர் திகைத்துப் போனார். தர்ம சங்கடமாகவும் இருந்தது. அந்த இளம் இந்தியருக்கு இந்தி தெரியும் என்ற எண்ணத்தில் தான் பேசிக் கொண்டிருந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.
"உங்கள் இந்தி எனக்குப் புரிகிறது. ஆனால் அதைத் தமிழச்சியான என் மீது ஏபன் திணிக்கிறீர்கள்? இந்த விஷயத்தில் நான் தமிழ் வெறியள்"

அதற்குப் பின் நடந்த உரையாடலை மது ஓரிடத்தில் எழுதியிருக்கிறார்:
"தமிழ் வெறியள் என்று சொல்லிக் கொள்கிறீர்களே, அதற்கு என்ன அர்த்தம்?"

"தமிழர்களாகிய எங்கள் மீது இந்தியை ஒரு தேசிய மொழியாகத் திணிக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்று அர்த்தம்"
"உங்களுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரியுமா?"
"இல்லை. நான் (பள்ளியில்) தமிழ் படிக்கவில்லை. என்னால் தமிழ் பத்திரிகைகளோ புத்தகங்களோ படிக்க முடியாது"
"வீட்டில் தாய் தந்தையரோடு என்ன மொழியில் பேசுவீர்கள்?"
"பெரும்பாலும் ஆங்கிலம்தான்"
"தமிழ்ப் பேச உங்களுக்கு எப்போதாவது வாய்ப்புக் கிடைக்குமா?"
"ஓ கிடைக்குமே! சென்னையில் வசிக்கும் என் தாத்தா பாட்டியைப் பார்க்கப் போகும் போது. பாட்டிக்கு ஆங்கிலம் தெரியாது. அவருடன் பேச வேண்டுமானல் எனக்குத் தெரிந்த தமிழில்தான் பேச வேண்டும். வீட்டில் உள்ள வேலைக்காரர்களோடு பேச வேண்டியிருக்கும். கடைக்காரர்களோடும், தெருவில் பொருட்கள் விற்க வருகிறவர்களிடமும் தமிழில்தான் பேச வேண்டியிருக்கும்"
"பாட்டியின் காலத்திற்குப் பின் என்ன ஆகும்? தமிழ் உங்களைப் பொறுத்தவரை, ஒரு சுய வெளிப்பாட்டிற்கான மொழியாக இல்லாமல், வேலைக்காரர்களிடமும் கடைக்காரர்களிடமும் பேசும் மொழியாக ஆகிவிடாதா?"
"நான் சொல்வது அதில்லை. நான் தமிழை மிகவும் நேசிப்பவள். எனவே தமிழ் நாட்டில் இந்தியைத் திணிக்க அனுமதிக்க மாட்டேன்."
"நீங்கள் தமிழை மிகவும் விரும்புபவராக இருந்தும் ஆங்கிலம் எப்படி உங்கள் வீட்டு மொழியாகக்கூட மாறியது?"
"ஆங்கிலம், ஒரு சர்வதேச மொழி, இந்தியாவை இணைக்கும் மொழி"
"ஆங்கிலம் இந்தியாவில் யாருடன் உங்களை இணைக்கும்? மகராஷ்டிராவில் உள்ள விவசாயியுடனோ, குஜராத்தில் மீன் விற்கும் பெண்ணுடனோ நீங்கள் ஆங்கிலத்தில் பேச முடியுமா?"

ஒரு சராசரித் தென்னிந்தியனுக்கு இந்தி கற்றுக் கொள்வதென்பது வட இந்தியனுக்கு அரசியல் ரீதியாக அடிமைப்படுவதற்கு ஒப்பானது என்பதைப் பல வடவர்களால் புரிந்து கொள்ளவே முடியாது. வட இந்தியாவில் உள்ள சமஸ்கிருதமயமான இந்தி/ இந்து அடையாளத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட,தன் தாய்மொழி சார்ந்த அடையாளத்தை வலியுறுத்துவது என்பது தென்னிந்தியாவில் 19ம் நூற்றாண்டிலேயே துவங்கிவிட்டது. திமுக, என்.டி.ஆரின் தெலுங்கு தேசம், ராஜ்குமாரின் ரசிகர் மன்ற மேடைகளில் தமிழ் தெலுங்கு, கன்னடம் இவற்றின் பழமையையும், புகழையும் முழங்குவது என்பது சர்வசாதரணமானது.தாய்மொழிசார்ந்த ஒரு பெருமித உணர்வைத் தென்னிந்தியர்களுக்கு ஊட்டியது இந்த இயக்கங்கள் ஆற்றிய பெரும் பணி எனலாம். தென்னிந்தியர்கள், நம்மை அடிமை கொண்டுவிடுமோ என இந்தியைக் கண்டு அஞ்சுவது போல ஆங்கிலத்தைக் கண்டு அஞ்சுவதில்லை.
டாக்டர், சினிமா, டீ, காபி, ரேஷன், சைகிள், போலீஸ், ரயில், டி.வி., போன், ஹலோ, பர்ஸ், பாக்கெட், ரோடு, ஆட்டோ, காலண்டர், டைரி, நெக்லஸ், சோப் இவையெல்லாம் இப்போது தமிழர்களுக்கு ஆங்கிலச் சொற்கள் அல்ல. சாதாரண மனிதனைப் பொறுத்தவரை அவை தமிழ் சொற்கள். அவன் அவற்றைத் தன் உரையாடலில், அவற்றின் சரியான அர்த்ததில், அன்றாடம் சரளமாக உபயோகிக்கிறான் ('அசால்ட்' போல தவறாக பயன்படுத்துவதில்லை)

எனவேதான் வெகுஜனங்களின் அன்பைப் பெற்ற எம்.ஜி.ஆர், மொழிப் போராட்டம் உச்ச கட்டத்தில் இருந்த நாட்களிலேயே, தனது வெற்றிப் படம் ஒன்றிற்கு, ரகசியப் போலீஸ் என்று பெயர் வைத்தபோது எந்த முணுமுணுப்பும் எழவில்லை. அதே போல சிவாஜி தனது படம் ஒன்றிற்கு டாக்டர் சிவா என்று பெயர்சூட்டிய போது யாரும் (அதிர்ச்சியில்) புருவங்களை உயர்த்தவில்லை. இந்த இரண்டு பெரிய நட்சத்திரங்களுக்கும் அரசியல் அடையாளங்களும் இருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

மொழியின் பெயரால் உரிமைகள் கோரப்படும் போதெல்லாம், இவர்கள் யாருடைய மொழியைப் பற்றி பேசுகிறார்கள்? என நான் யோசிப்பதுண்டு. இரண்டு வகையான தமிழ் இருக்கிறது. ஒன்று காவியங்களில் உள்ள தமிழ். இன்னொன்று தெருவில் பேசப்படும் தமிழ். யாருடைய உரிமைளை, யாருடைய அடையாளங்களைப் பற்றி இவர்கள் கவலைப்படுகிறார்கள்? பண்டிதர்களுடைய மொழியைப் பற்றியா? சாதாரண மனிதனின் மொழியைப் பற்றியா?

எனக்கு லூயி கரோலுடைய ஒரு வாசகம் நினைவுக்கு வருகிறது."நான் ஒரு சொல்லைப் பயன்படுத்தும் போது அது எதைக் குறிக்க வேண்டுமோ அதைத்தான் குறிக்கிறது.வேறெதையும் கூடவோ குறையவோ அது சொல்வதில்லை" என்றான் ஹம்டி டம்டி, சற்றே ஆணவம் தொனிக்கும் குரலில். "ஒரு சொல் பல அர்த்தங்களைக் கொடுக்க முடியுமா என்பதுதான் கேள்வியே" என்றாள் ஆலிஸ். ஹம்ப்டி சொன்னான் பதிலுக்கு, " எந்த சொல் அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதுதான் கேள்வி" (த்ரூ லுக்கிங் கிளாசில்)
*
இதுதான் நான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம். இதன் மூலம்
நான் சொல்ல முற்பட்டது. ஒரு மொழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் இருக்கலாம். ஆனால் எது பொதுமக்களின் சொல்லோ அதுதான் மொழி.பல ஆங்கிலச் சொற்களை சாதாரணத் தமிழன் தமிழ் போல் பயன்படுத்துகிறான் என்றால் அதுதான் தமிழ். பண்டிதர் நாவில் மட்டும் வழங்குவதல்ல)

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, February 08, 2005

பத்ரி குறிப்பிட்டிருப்பதாலும், சிஃபி தளத்தில் உள்ள அமுதசுரபி இன்னமும் பிப்ரவரி இதழை வெளியிடாததாலும், என் கட்டுரையை வாசிக்க விரும்பும் வாசகர்களின் ஆர்வம் கருதி அந்தக் கட்டுரையை இங்கே பதிவு செய்கிறேன். ( இது ஜன்னலுக்கு வெளியே பதிவில்தான் வெளியாகி இருக்க வேண்டும். ஆனால் பத்ரியின் இணைப்பு இந்தப் பதிவைச் சுட்டுவதால், வாசகர்களின் வசதி கருதி இது இங்கே வெளியிடப்படுகிறது.)


இனி 'ஹேப்பி பொங்கல்' இல்லை!

(இதுதான் நான் தந்த தலைப்பு)

அல்லது

ஒரு பெரும் பாய்ச்சல்

பொங்கல் நாளன்று என் கைத் தொலைபேசிக்கு ஏராளமான குறுஞ்செய்திகள் வந்தன. பெரும்பாலும் ஹேப்பி பொங்கல் என்ற ஆங்கில வாழ்த்துக்கள்.சில பொங்கல் பானை, கரும்பு ஆகியவற்றுடன் பொங்கல் வாழ்த்துக்கள் என்ற வாசகத்தையும் படமாக ஆக்கி அனுப்பப்பட்ட சித்திரச் செய்திகள் (Picture messgages). கைத்தொலை பேசியில் உள்ள விசைகளைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் செய்திகள் அனுப்புவது போல, தமிழில் அனுப்ப முடியாதா?
இனி இந்தக் கேள்விக்கு இடமில்லை. இந்தப் பொங்கலன்று சிங்கப்பூர் வானொலியான ஒலி, முரசு அஞ்சலைத் தமிழுக்குத் தந்த முத்து நெடுமாறனுடன் இணைந்து கைத்தொலைபேசிகளில் தமிழிலேயே குறுஞ்செய்திகளை அனுப்பும் தொழில்நுட்பத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டது. உலகின் முதல் தமிழ்க் குறுந்தகவலை கவிஞர் வைரமுத்து அனுப்பி அந்த சேவையைத் தொடங்கி வைத்துள்ளார்.
கைத்தொலைபேசிக்குத் தமிழை எடுத்துச் சென்றது தமிழ் தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு பெரும் பாய்ச்சல்.ஒரு தலைமுறை காகிதத்தில் கையால் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தது. இன்னொரு தலைமுறை கணினி கொண்டு இணையத்தில் எழுதி மகிழ்ந்து கொண்டிருக்கிறது. இன்றைய இளந்தலைமுறை கணினியை விடக் கைத்தொலைபேசியின்பால் கவர்ந்திழுக்கப்பட்டிருக்கிறது. முத்து நெடுமாறனின் இந்த முயற்சியின் மூலம் தமிழ் இன்னொரு தலைமுறையை நெருங்க அடியெடுத்து வைக்கிறது.
இனி வரும் காலங்களில் இது போன்ற பாய்ச்சல்களைத் தமிழ் தகவல் தொழில்நுட்பம் பெருமளவில் எதிர் கொள்ளும். முத்து நெடுமாறன் மலேசியாவில் இதற்கான முயற்சியில் இறங்கியிருந்த அதே வேளையில் தமிழ்நாட்டில் அண்ணாப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பாஸ்கரன் இதே போன்றதொரு திட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
தமிழில் எழுத்துக்கள் 36 (12 உயிர்+18 மெய்+6 கிரந்த எழுத்துக்கள்) கைத்தொலைபேசியில் உள்ள விசைகள் 9 (12 விசைகளில் 3 விசைகள் அதன் இயக்கத்திற்குத் தேவை) எனவே ஒரு விசையை ஒன்றுக்கு மேற்பட்ட எழுத்துக்களுக்கு ஒதுக்க வேண்டும். ஒரு சொல்லை எழுத பலவிசைகளை பல முறை அழுத்த வேண்டிய நிலை. நீளமான செய்திகளை எழுதும் போது இதனால் அலுப்புத் தட்டும். இதைத் தவிர்ப்பதற்காக ஒரு எழுத்தை உள்ளிடும் போதே அதற்கு அடுத்த எழுத்து எதுவாக இருக்கும் என ஊகித்துக் கொள்ளும் வகையில் அமைத்து விட்டால் நிலமையை எளிதாக்கலாம். இதை predictive text input என்று சொல்கிறோம். இதை சாத்தியமாக்க ஒரு சொற்களஞ்சியத்தை உருவாக்க வேண்டும். தமிழில் அது எளிதல்ல. ஏனெனில், தமிழில், பால், திணை, ஒருமை-பன்மை, காலம் இவற்றை சொல்லின் இறுதியில்தான் (விகுதியில்) வெளிப்படுத்துகிறோம். படித்தான், படித்தாள் இரண்டிற்கும் இறுதி எழுத்து மட்டும்தான் வித்தியாசம். கைத் தொலைபேசியில் ன், ள் இரண்டும் ஒரே விசையில் (L, n) அமைந்திருக்கும் போது சிக்கல் அதிகமாகிறது. தமிழில் உள்ளிடுவதற்கான predictive text system ஐ பாஸ்கரன் உருவாகியிருக்கிறார்.
தமிழ் ஓர் ஆச்சரியமான மொழி. சொல் என்ற வார்த்தைக்கு பேசு என்று அர்த்தம். வார்த்தை என்றும் அர்த்தம். உரை என்ற சொல்லுக்கு பேசு என்று பொருள். எழுதப்பட்ட உரை என்றும் பொருள். பேச்சு, எழுத்து என்ற இரு வழக்குகளுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை இந்தச் சொற்களே புலப்படுத்தும். நாம் உச்சரிக்கும் ஒரு வார்த்தையைக் கணினி விளங்கிக் கொண்டு அதை உரையாக மாற்றிக் கொடுத்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்!. பொறியியல் கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராகப் பணியாற்றும் மாதரசி இதற்கான தொழில்நுட்பத்தில் முனைந்திருக்கிறார். ஐ.ஐ.டியிலும் இதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. "ஆங்கிலத்தில் இல்லாத ஒரு வசதி தமிழில் உண்டு. ஆங்கிலத்தில் ஒரு எழுத்தை பலவகைகளில் உச்சரிக்கிறார்கள். மாதரசியை ஆங்கிலத்தில் மதராசி என்று படிப்பவர்கள் உண்டு. Coffee என்ற சொல்லில் O என்ற எழுத்து ஆ என்றும் E என்ற எழுத்தி இ என்றும் உச்சரிக்கப்படுகிறது. ஆனால் தம்ழில் ஒரு எழுத்தை அதற்குரிய ஒலியில்தான் உச்சரிக்க முடியும். க, ச, ப போன்ற எழுத்துக்கள் அதன் முன் வரும் ஒற்றின் அடிப்படையில் உச்சரிப்பில் மாற்றம் பெறுகின்றன. தங்கம் என்பதி வரும் 'க'வை கப்பலில் வரும் 'க' போல ஒரு போதும் உச்சரிக்க முடியாது. இது தமிழில் பேச்சை உரையாக்கும் தொழில்நுட்பத்தை எளிதாக்குகிறது"என்கிறார் மாதரசி. உண்மைதான். ஆனால் தமிழில் 'காகம்' இருக்கிறதே, அது பிரசினை தருமோ?
பேச்சை உரையாக்குவது இருக்கட்டும். பேசுவதற்கு ஏற்ற உரையைத் தயாரிக்கவும் கணினியைப் பயன்படுத்தலாம். இந்திய அறிவியல் கழக (IISc) பேராசிரியர் நா.பாலகிருஷ்ணன் அண்மையில் ஒரு சுவையான தகவலைப் பகிர்ந்து கொண்டார். ஒருமுறை இந்தி தெரியாத ஒருவர், இந்தியில் உரையாற்ற வேண்டியிருந்தது. அவருக்கு உரை நிகழ்த்துகிற அளவிற்கு இந்தி தெரியாது. இந்தி உரையை தமிழ் எழுத்துக்களில் ஒலி பெயர்த்துக் கொடுத்துவிட்டது கணினி. அதாவது இந்தியில் பாரத் என்று எழுதப்பட்டிருந்தால் அது தமிழில் பா-ர-த் என்று எழுதிவிடும். அதைப் பார்த்து இந்தியில் பேசுவது போலவே படித்து (நடித்து) விடலாம். சாதனா சர்கம் தமிழில் பாடுகிறாரே அதே டெக்னிக்தான்.

இதற்காக 'ஓம்' என்ற மென்பொருள் பொதியை (Software package) பேராசிரியர் பாலகிருஷ்ணன் உருவாக்கிக் கொடுத்துள்ளார். இது போன்ற ஒலிபெயர்ப்புகள் (Transliteration) எளிதாகிவிட்டால் மொழி என்னும் தடையைக் கடந்து விடலாம்.
ஆனால் உணர்வு ரீதியான பிணைப்பு ஏற்பட வேண்டும் என்றால் அது மொழிபெயர்ப்புகள் மூலம்தான் சாத்தியம். கணினிகள் மொழிபெயர்க்கவும் செய்கின்றன. (Machine Translation) அதையும் பேராசிரியர் பாலகிருஷ்ணன் செய்து காட்டினார். ஆனால் இந்தத் தொழில்நுட்பம் இன்னும் மேம்படவேண்டிய நிலையில்தான் இருக்கிறது. இப்போது கணினி மொழிபெயர்த்துத் தரும் பிரதியை மொழி அறிந்தவர்களைக் கொண்டு மெய்ப்புப் பார்த்து பயன்படுத்திக் கொள்ளும் நிலை இருக்கிறது. மொழிபெயர்ப்பை விரைவாக செய்து கொள்ள அது போதுமானது.
பேராசிரியர் பால கிருஷ்ணன் இன்னொரு பணியில் முனைப்பாக இருக்கிறார். அது அச்சு வடிவில் உள்ள பத்து லட்சம் நூல்களை இலக்கப்பதிவாக்குவது (digitalisation). 90 ஆயிரம் புத்தகங்கள் இலக்கப்பதிவாக்கப்பட்டுள்ளன. அதில் 30 ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் இந்திய மொழிப் புத்தகங்கள். குடியரசுத்தலைவர் மாளிகை நூலகத்தில் உள்ள பெரும்பாலான புத்தகங்கள் இலக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளன. எப்படி இவ்வளவு அதிக எண்ணிக்கையில் இலக்கப்பதிவு சாத்தியமாயிற்று? ஒளி உணரி (optical Character recognition) என்னும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு புத்தகத்தை ஸ்கேன் செய்தால் அது கணினியில் உரையாக மாறிவிடும். பின் அதை மற்ற கணினி ஆவணங்களைப் போலவே பயன்படுத்திக் கொள்ளலாம். இப்படி இலக்கப்பதிவு பெற்ற நூல்கள் இணையத்தில் ஒரு மின் நூலகமாக அமைக்கப்பட்டு வருகிறது
இணையத்தில் உள்ள புத்தகக் கடையான அமோசான். காமில் தமிழ் புத்தகங்களை வாங்க முடியாத நிலை இருக்கிறது. அந்தக் குறையை காமதேனு என்ற இணையதளத்தின் மூலம் போக்கியிருக்கிறார் பத்ரி சேஷாத்ரி. வீட்டில் கணினி முன் அமர்ந்தபடியே நீங்கள் புத்தகங்களுக்கு ஆர்டர் செய்யலாம். நீங்கள் ஆர்டர் செய்த புத்தகம் இரண்டொரு தினங்களில் உங்கள் வீட்டில் டெலிவரி செய்யப்படும். புத்தகக் கண்காட்சி நெரிசலைத் தவிர்க்கலாம் என்பது மட்டுமல்ல, வருடத்தின் 365 நாளும் புத்தகக் கண்காட்சி - இணையத்தில். பெருந்தன்மையாக தன்னுடைய கிழக்குப் பதிப்பக நூல்களுக்கு மட்டுமன்றி பல பதிப்பாளர்களின் நூல்களை இதன் மூலம் பெற வகை செய்திருக்கிறார் பத்ரி.
இங்கு சொல்லப்பட்டவையெல்லாம் ஒரு முன்னோட்டம்தான். இது ஒவ்வொன்றைக் குறித்தும் தனித் தனிக் கட்டுரைகள் எழுதலாம். எழுதப்பட வேண்டும். ஆனால் தமிழர்கள் எப்படி ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்தையும் தங்கள் மொழிக்குக் கொண்டுவந்து தங்களுடையதாக ஆக்கிக் கொள்வதில் முனைப்பாக இருக்கிறார்கள் என்பதை இது கோடி காட்டும். அந்தத் திசையில் நீங்களும் ஒரு அடி எடுத்து வைக்கலாம். உங்களிட்ம் ஒரு கணினி இருந்தால், அதைக் கொண்டு தமிழில் எழுதுவதற்கு வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். நானும் என் நண்பர்களும் உதவக் காத்திருக்கிறோம், இலவசமாக.

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Friday, February 04, 2005

தொடர்ந்து நடக்கிறாள் தாமிரபரணி

'தாமிரம் வரு(ம்) நீ(ர்) ' என்பது தாமிரவருணியின் பெயர்க்காரணமாக இருக்கலாம் என்று திருமலை கருதுகிறார். அவர் தந்தை ஆற்றுப் படுகையிலிருந்து தாமிரம் சேகரித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். தாமிரபரணி நீரில் தாமிரம் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் நீண்டகாலமாகச் சொல்லி வருகிறார்கள். ஆனால் அறிவியல் பூர்வமாக இது நிரூபிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

தாமிரபரணி ஆற்றின் கரையில், நெல்லைக்கு அருகில், செப்புத் தகடுகளால் கூரை வேயப்பட்ட நடராஜர் கோயில் ஒன்று இருக்கிறது. தாமிரசபை என்று அதற்குப் பெயர். தில்லையில் அமைந்த பொன்னம்பலத்தைப் போல தாமிரத்தால் உருவாக்கப்பட்ட முயற்சி. அதையும் கூட நதியின் பெயர்க் காரணமாகச் சொல்பவர்கள் உண்டு.

தாமிரத்திற்கும் தாமிரபரணிக்கும் உள்ள தொடர்பு அறிவியல் ரிதியாக ஆராயத்தக்கது.

வடநாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற விஜயன், அந்தச் சொல்லை சிவப்பு என்ற அர்தத்தில் பயன்படுத்தியதாக ஈழநாதன் குறிப்பிட்டிருக்கிறார். வடமொழி மகாபாரதத்திலும், காளிதாசனுடைய ரகுவம்சத்திலும் தாமிரபரணி என்றே குறிப்பிடப்படுவதால் அது வடமொழிச் சொல், அல்லது வடமொழியிலும் வழக்கில் இருந்த சொல் என்பது தெளிவாகிறது.
வடநாட்டில் இருந்தவர்கள் தாமிரபரணி தீரத்தில் வந்து குடியேறி இருக்கலாம். காவிரியைப் போல் இரு பருவ மழைகளிலும் நீர் பெற்று ஆண்டு முழுவதும் வற்றாமல் ஒடிக் கொண்டிருந்த நதி அது.( ஓராண்டிற்கு மலை உச்சியில் 300 அங்குலம் மழை பெய்ததாக திருவாங்கூர் மன்னரது வானிலை ஆய்வாளர்களது பதிவு இருக்கிறது) தாமிரபரணி உற்பத்தியாகும் பொதிகை மலை ஐந்து சிகரங்களைக் கொண்டது என்றாலும் அகன்ற தளத்தைக் கொணடது. நதியும் அதனூடே கணிசமான தூரம் நடக்கிறது. எனவே அதன் வண்டல் அதிகம். அந்த வண்டல் சேரும் பகுதிகள் - ஸ்ரீவைகுண்டத்தில் துவங்கி நதி கடலில் கூடும் துறை வரை - இப்போதும் வளமான பகுதி. எனவே அங்கு குடியேற்றங்கள் ஏற்படுவது இயல்பு.


வடமொழி இலக்கியங்கள் நதியைத் தாமிரபரணி என்று சொன்னாலும், தமிழிலக்கியங்கள் அந்தப் பெயரில் நதியைக் குறிப்பிடவில்லை. பொருநை என்றுதான் குறிப்பிடுகின்றன. நம்மாழ்வார் 'பொருநல் வடகரை' என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். பொருத்தம் என்பதே பொருநல் என மருவியிருக்க வேண்டும் எனக் கலைகளஞ்சியம் கருதுகிறது. அதற்கு சான்றாக முதல் ராஜராஜனுடைய கல்வெட்டு ஒன்று (ஆண்டு 1013) சீவலப்பேரிக்கு அருகில் சித்ரா நதி தாமிரபரணியோடு கலக்குமிடத்தை தண் பொருத்தம் என்று குறிப்பிடுவதைச் சுட்டுகிறது. ( தண் என்றால் குளிர்ந்த என்று அர்த்தம் தண் நீர் குளிர்ந்த நீர். வெந் நீர் சூடான நீர்) சேக்கிழார் பெரிய புராணத்தில் பாண்டிய நாட்டைத் தண் பொருந்தப் புனல் நாடு என்று குறிப்பிடுகிறார்.

கடந்த நூற்றாண்டில் வாழந்த பாரதி கூட தாமிரபரணி என்று குறிப்பிடுவதில்லை. 'காவிரி தென்பெண்ணை, பாலாறு, தமிழ் கண்ட வையை பொருநை என மேவிய பல ஆறு' என்றுதான் அவனது பட்டியல் நீள்கிறது.

பொருத்தம் > பொருந்தல் > பொருநல் > பொருநை > பூர்ண > பூரணி > பரணி என்றாகி இருக்க வேண்டும் என்பது என் அனுமானம். ஊகம்தானே தவிர ஆராய்ந்தறிந்த முடிவல்ல. வேறு சாத்தியங்கள் இருந்தால் நண்பர்கள் சொல்ல வேண்டும்.

இன்றைய தாமிரபரணி பற்றியும் திருமலை குறிப்பிட்டிருக்கிறார். முற்றிலும் உண்மை. பல நூறு தலைமுறைகளை ஆதரித்துத் தாங்கிய அந்த ஆறு இன்று ஆதரிப்பாரற்றுக் கிடக்கிறது. கருவேலம் மட்டுமல்ல. சில பகுதிகளில் ஆகாயத்தாமரை எனப்படும் Water Hysynth படர்ந்து கிடக்கிறது. இது ஆற்றையே அழித்து விடும் தன்மை கொண்டது.இதை அகற்றக் கூட சக்தியற்றுக் கிடக்கிறான் நெல்லைத் தமிழன். ஒரு சில இளைஞர்கள் இதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

அயல் நாட்டில் வாழும் நெல்லைத்தமிழர்கள் யாரேனும் உதவ முடியுமா?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
 
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது