ஒரு வாசகனின் மனப்பதிவுகள்

Friday, February 04, 2005

தொடர்ந்து நடக்கிறாள் தாமிரபரணி

'தாமிரம் வரு(ம்) நீ(ர்) ' என்பது தாமிரவருணியின் பெயர்க்காரணமாக இருக்கலாம் என்று திருமலை கருதுகிறார். அவர் தந்தை ஆற்றுப் படுகையிலிருந்து தாமிரம் சேகரித்ததாகவும் தெரிவித்திருக்கிறார். தாமிரபரணி நீரில் தாமிரம் இருப்பதாக அந்தப் பகுதி மக்கள் நீண்டகாலமாகச் சொல்லி வருகிறார்கள். ஆனால் அறிவியல் பூர்வமாக இது நிரூபிக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

தாமிரபரணி ஆற்றின் கரையில், நெல்லைக்கு அருகில், செப்புத் தகடுகளால் கூரை வேயப்பட்ட நடராஜர் கோயில் ஒன்று இருக்கிறது. தாமிரசபை என்று அதற்குப் பெயர். தில்லையில் அமைந்த பொன்னம்பலத்தைப் போல தாமிரத்தால் உருவாக்கப்பட்ட முயற்சி. அதையும் கூட நதியின் பெயர்க் காரணமாகச் சொல்பவர்கள் உண்டு.

தாமிரத்திற்கும் தாமிரபரணிக்கும் உள்ள தொடர்பு அறிவியல் ரிதியாக ஆராயத்தக்கது.

வடநாட்டிலிருந்து இலங்கைக்குச் சென்ற விஜயன், அந்தச் சொல்லை சிவப்பு என்ற அர்தத்தில் பயன்படுத்தியதாக ஈழநாதன் குறிப்பிட்டிருக்கிறார். வடமொழி மகாபாரதத்திலும், காளிதாசனுடைய ரகுவம்சத்திலும் தாமிரபரணி என்றே குறிப்பிடப்படுவதால் அது வடமொழிச் சொல், அல்லது வடமொழியிலும் வழக்கில் இருந்த சொல் என்பது தெளிவாகிறது.
வடநாட்டில் இருந்தவர்கள் தாமிரபரணி தீரத்தில் வந்து குடியேறி இருக்கலாம். காவிரியைப் போல் இரு பருவ மழைகளிலும் நீர் பெற்று ஆண்டு முழுவதும் வற்றாமல் ஒடிக் கொண்டிருந்த நதி அது.( ஓராண்டிற்கு மலை உச்சியில் 300 அங்குலம் மழை பெய்ததாக திருவாங்கூர் மன்னரது வானிலை ஆய்வாளர்களது பதிவு இருக்கிறது) தாமிரபரணி உற்பத்தியாகும் பொதிகை மலை ஐந்து சிகரங்களைக் கொண்டது என்றாலும் அகன்ற தளத்தைக் கொணடது. நதியும் அதனூடே கணிசமான தூரம் நடக்கிறது. எனவே அதன் வண்டல் அதிகம். அந்த வண்டல் சேரும் பகுதிகள் - ஸ்ரீவைகுண்டத்தில் துவங்கி நதி கடலில் கூடும் துறை வரை - இப்போதும் வளமான பகுதி. எனவே அங்கு குடியேற்றங்கள் ஏற்படுவது இயல்பு.


வடமொழி இலக்கியங்கள் நதியைத் தாமிரபரணி என்று சொன்னாலும், தமிழிலக்கியங்கள் அந்தப் பெயரில் நதியைக் குறிப்பிடவில்லை. பொருநை என்றுதான் குறிப்பிடுகின்றன. நம்மாழ்வார் 'பொருநல் வடகரை' என்று ஓரிடத்தில் குறிப்பிடுகிறார். பொருத்தம் என்பதே பொருநல் என மருவியிருக்க வேண்டும் எனக் கலைகளஞ்சியம் கருதுகிறது. அதற்கு சான்றாக முதல் ராஜராஜனுடைய கல்வெட்டு ஒன்று (ஆண்டு 1013) சீவலப்பேரிக்கு அருகில் சித்ரா நதி தாமிரபரணியோடு கலக்குமிடத்தை தண் பொருத்தம் என்று குறிப்பிடுவதைச் சுட்டுகிறது. ( தண் என்றால் குளிர்ந்த என்று அர்த்தம் தண் நீர் குளிர்ந்த நீர். வெந் நீர் சூடான நீர்) சேக்கிழார் பெரிய புராணத்தில் பாண்டிய நாட்டைத் தண் பொருந்தப் புனல் நாடு என்று குறிப்பிடுகிறார்.

கடந்த நூற்றாண்டில் வாழந்த பாரதி கூட தாமிரபரணி என்று குறிப்பிடுவதில்லை. 'காவிரி தென்பெண்ணை, பாலாறு, தமிழ் கண்ட வையை பொருநை என மேவிய பல ஆறு' என்றுதான் அவனது பட்டியல் நீள்கிறது.

பொருத்தம் > பொருந்தல் > பொருநல் > பொருநை > பூர்ண > பூரணி > பரணி என்றாகி இருக்க வேண்டும் என்பது என் அனுமானம். ஊகம்தானே தவிர ஆராய்ந்தறிந்த முடிவல்ல. வேறு சாத்தியங்கள் இருந்தால் நண்பர்கள் சொல்ல வேண்டும்.

இன்றைய தாமிரபரணி பற்றியும் திருமலை குறிப்பிட்டிருக்கிறார். முற்றிலும் உண்மை. பல நூறு தலைமுறைகளை ஆதரித்துத் தாங்கிய அந்த ஆறு இன்று ஆதரிப்பாரற்றுக் கிடக்கிறது. கருவேலம் மட்டுமல்ல. சில பகுதிகளில் ஆகாயத்தாமரை எனப்படும் Water Hysynth படர்ந்து கிடக்கிறது. இது ஆற்றையே அழித்து விடும் தன்மை கொண்டது.இதை அகற்றக் கூட சக்தியற்றுக் கிடக்கிறான் நெல்லைத் தமிழன். ஒரு சில இளைஞர்கள் இதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.

அயல் நாட்டில் வாழும் நெல்லைத்தமிழர்கள் யாரேனும் உதவ முடியுமா?

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

2 Comments:

Anonymous Anonymous said...

தாமிரத்தின் காரணமாக தாமிரபரணியென்று அழைக்கப்படவும் நிறைய வாய்ப்புள்ளது. ஆற்றின் உலோக செரிவு காரணமாக காவிரி "பொன்னி" என்று வழங்கியதை நினைவிற்கொள்ளவேண்டும்.

2:58 AM

 
Blogger Unknown said...

I have a solution to convert the plants into useful product. can contact me through my email: microbetechnologies@gmail.com
R Sundaresan, Managing Director.

2:25 PM

 

Post a Comment

<< Home

 
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது