ஒரு வாசகனின் மனப்பதிவுகள்

Monday, April 11, 2005

விடை பெறுகிறேன். . . .வேதனையுடன்!

சிறிது நாள்களாகவே எனக்கு ஒரு கவலை இருந்து வந்தது. தமிழ் மணத்தில் வாசிக்கக் கிடைக்கிற வலைப்பதிவுகள் தந்த கவலை அது. தமிழ் வலைப்பதிவுகள் நம்பிக்கையும், கவலையும் ஒரு சேர ஊட்டுவனவாக இருந்து வருகின்றன. சில நேரங்களில் கவலைகளை நம்பிக்கைகள் வென்று விடும். சிலநேரம் கவலைகள் நம்பிக்கைகளைக் கொன்று விடும்.நோயும் மருந்தும் போல. கடைசியில் நோய் வென்று விட்டது.

70களின் மத்தியில் இலக்கியச் சிற்றேடுகளில் நிலவியதைப் போன்ற ஓர் கலாசாரம் இன்று தமிழ் வலைப்பதிவுகளில் நிலவுவதைப் போல ஒர் உணர்வு எழுகிறது.அந்தக் கலாசாரம் இலக்கியச் சிற்றேடுகளுக்கு என்ன பின்விளைவுகளை ஏற்படுத்தியது என்பதை அறிந்தவன் என்பதாலும், அத்தகையதொரு விளைவு தமிழ் வலைப்பதிவுகளுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது எனக் கருதுவதாலும் கவலை ஏற்படுகிறது.

வலைப்பதிவர்களில் பலர் இளைஞர்களாக இருப்பதால் 70களின் மத்தியில் நிலவிய சிறுபத்திரிகைக் கலாசாரம் என்னவென்று தெரியாமல் இருக்க வாய்ப்புண்டு. அவர்களுக்குப் புரிவதற்காக கசடதபறவை உதாரணமாகக் கொண்டு சொல்கிறேன். அந்த சிற்றிதழில் ஒரு புறம் சோல்ஷனிட்ஸன் பற்றிய ஓர் தீவிரமான ஆய்வுப் பார்வையில் எஸ்.வி.ராஜதுரை எழுதிய கட்டுரையோ, அல்லது அம்பை தனது படைப்பாற்றலின் உச்சத்தில் எழுதிய அம்மா ஒரு கொலை செய்தாள் கதையோ இடம் பெற்றிருக்கும். இன்னொருபுறம் வெ.சாமிநாதனின் அல்லது வெ.சா. மீதான எள்ளல்கள், வசைகள், சாடல்கள் இடம் பெற்றிருக்கும்.

அன்றைய சிறு பத்திரிகைகளின் கலாசாரத்தை சுருக்கமாக இப்படிப் பட்டியலிடலாம்:
* நியோ நார்சிசம்: அதாவது தன்னைத்தானே வியந்து கொள்ளல்.
* வீர வணக்கம்: தனக்கு உவந்த ஒரு எழுத்தாளரை அல்லது ஒரு கருத்தியலை, வழிபாட்டு நிலையில் அணுகுவது அல்லது பீடத்தில் ஏற்றி வைத்துக் கும்பிடுவது. அந்த நபரை/ கருத்தியலை விமர்சிப்பவர்களை எதிரிகளாக எண்ணி இகழ்ந்துரைப்பது, ஏளனம் செய்வது, அல்லது வசை பாடுவது
*வசைத் தொற்று: ஒரு இதழில் எழுதப்பட்ட கருத்து குறித்து அந்த இதழுக்கே தனது மாற்றுக் கருத்துக்களை எழுதி அங்கே ஓரு விவாதக் களனை உருவாக்காமல், வேறு ஒரு சிறு பத்திரிகைக்கு எழுதி, சச்சரவைப் பரப்புவது. கசடதபறவில் அசோகமிரன் எழுதிய கட்டுரைக்கு பதில் அஃக்கில் வரு, அஃகில் வந்ததற்கான கருத்து கொல்லிப்பாவையில் வரும். கொல்லிப்பாவைக்குத் தொடர்ச்சி இலக்கிய வட்டத்தில் வரும். இப்படி. இதன் காரணமாக மொத்த சூழ்லையுமே ஒரு பூசலிடும் மனோபவத்தில் வைத்திருப்பது

*துச்ச மொழி: இலக்கிய ஊழல், நபும்சகம், பேடிகள், விசிலடிச்சான் குஞ்சுகள் எனக் கடுமையான வசைமொழிகளை, குற்றம் சாட்டப்படுபவரின் மற்ற தகுதிகள், படைப்பாளுமை இவற்றைக் கருத்தில் கொள்ளாமல் அள்ளி வீசுவது. உதாரணத்திற்கு தினமணிக் கதிர் ஜெயகாந்தனின் ரிஷி மூலம் கதையைப் பாதியில் நிறுத்தியது. அதே போல சில வருடங்கள்கழித்து இந்திராபார்த்தசாரதியின் திரைகளுக்கு அப்பாலும் பாதியில் நிறுத்தப்பட்டது. இபா தனது அனுபவம் குறித்து கணையாழியில் எழுதினார். அதைத் தொடர்ந்து கசடதபறவில் வெ.சா எழுதினார். அதைக் கேள்விப்பட்ட ஜெ.கா, இப்போது இவ்வளவு கூச்சல் போடுகிறவர்கள், என் கதை நிறுத்தப்பட்ட போது எங்கே போயிருந்தார்கள்? என தன் நண்பர்களிடம் அங்கலாய்த்துக் கொண்டார்.அந்த வேளையில் அ.மி. அழவேண்டாம், வாயை மூடிக் கொண்டிருந்தால் போதும் என ஒரு கட்டுரை வெ.சாவிற்கு பதில் சொல்வது போல எழுதினார். அதைத் தொடர்ந்து வெ.சாவின் இலக்கிய ஊழல்கள் என்ற பிரசுரம் வெளியாயிற்று. அதில் ஜெ.கா, அ.மி எல்லோருக்கும் அர்ச்சனை நடக்கும். அந்தப் பிரசுரத்தில் இந்தச் சொற்கள் தாராளமாக இறைக்கப்பட்டிருக்கும்.
* குழிப் பிள்ளையைத் தோண்டி அழுதல்: என்றோ நடந்து முடிந்த ஒரு சம்பவத்தை இன்றைய சர்ச்சையில் ஒரு பாயிண்ட்டாகப் பயன்படுத்துதல். எதிரி அதற்கு விளக்கமளிக்க முற்படுவான். கவனம் அங்கே திரும்பும். பேசவந்த பிரசினை பின் தள்ளப்பட்டுவிடும்.

*திரிப்பு: வேறு ஏதோ ஒரு சூழ்நிலையில் சொல்லப்பட்ட கருத்தை அந்த context ஐ மறைத்துவிட்டு தன் வசதிக்குத் தக்கவாறு பயனபடுத்திக் கொள்ளல்.

சுருக்கமாகச் சொன்னால், ஒரு சிவில் சமூகத்தில், விவாதங்களில் எவையெல்லாம் பின்பற்றத் தகாத மரபுகளோ அவையெல்லாம், பொதுவாக, அப்போது சிறு பத்திரிகைகளின் விவாதங்களில் பின்பற்றப்பட்டன. இதன் பின் விளைவு என்பது எல்லோரும் கூச்சலிட்டுச் சண்டையிட்டு, ஒருவரை ஒருவர் தாக்கி, சக்தி இழந்து கசப்புணர்வுடன் வீழ்ந்தனர். 70 களில் ஏராளமான சிறுபத்திரிகைகள் இருந்தன;80களில் சிறு பத்திரிகை இயக்கம் நைந்து நூலாகின.

இதே போன்ற ஒரு திசையை நோக்கி வலைப்பதிவுகள் நடக்கின்றன என நான் அஞ்சுகிறேன். இல்லை என மறுப்பவர்கள் அண்மையில் நட்ந்த விவாதங்களில் மேலே சொல்லப்பட்டுள்ள அம்சங்கள் காணப்பட்டனவா இல்லையா என பரிசீலித்துப் பாருங்கள்.

எல்லாப் பதிவுகளுமே அப்படி இருக்கின்றன என்று நான் சொல்லவரவில்லை. தங்கமணி, சுந்தர மூர்த்தி, வெங்கட் போன்றவர்கள் விவாதங்களை, மேலே சொன்ன நோய்க்கூறுகளிலிருந்து விடுவித்து அறிவார்ந்த ஒரு முயற்சியாக மாற்ற பெரும் பிரயத்தனப்படுகிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. இந்த நோய்க்கூறான மனோபாவங்களை உணர்ந்து கொள்கிறவர்கள் கூட, ' நமக்கேன் வம்பு' என்று ஒதுங்கி நிற்கிறார்கள்.

இன்று சச்சரவாளர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஆரம்பத்தில் கான்சர் செல்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும். நாட்செல்லச் செல்ல அவை மற்ற புலன்களின் திறனைக் குறைத்துவிடும்.

இது போன்ற சிந்தனையில் நான் இருந்த போது, பி.கே.சிவகுமார் தனது வலைப்பதிவில் என்னைப் பற்றி எழுதியிருந்த ஒரு பதிவு என் கவலைகளை சந்தேகத்திற்கு இடமின்றி உறுதி செய்தது. திசைகள் ஏப்ரல் இதழில் வெளியிட்டிருந்த மாலன் படைப்புலகம் கருத்தரங்கம் பற்றிய ரிபோர்ட்க்கு அவர் எதிர்வினை ஆற்றியிருந்தார்.

அவர் எதிர்வினை ஆற்றியது குறித்து எனக்கு வருத்தமோ, கோபமோ இல்லை. ஆனால் அதற்கு அவர் பயன்படுத்தியிருக்கும் மொழி, அந்தக் கட்டுரையின் sub-text, எனக்கு வருத்தமளிக்கிறது.

திசைகளின் அந்தக் கட்டுரை, அந்தக் கருத்தரங்கமே, காலச்சுவடில் வெளியான ஒருவரது விமர்சனத்திற்கு வைக்கப்பட்ட பதில் என்பதைப் போல தோற்றம் உருவாக்கப்படுகிறது. காலச்சுவடு விமர்சனத்தின் தலைப்பு: லட்சியத்தில் விழுந்த ஓட்டைகள். சிவகுமார் திசைகள் பற்றிய தனது பதிவிற்கு வைக்கும் தலைப்பு: ஓட்டையை மறைக்கும் லட்சியங்கள்.
உண்மையில் காலச்சுவடு விமர்சனத்திற்கும் கருத்தரங்கிற்கும் தொடர்பு இல்லை. கருத்தரங்கம் நடைபெற்றது மார்ச் 14ம் தேதி. காலச்சுவடு வெளியானது ஏப்ரல் முதல் வாரத்தில். காலச்சுவடில் என்ன வரப்போகிறது என்று எனக்கு எப்படியே முன் கூட்டியே தெரிந்திருக்க முடியும்?

திசைகள் கட்டுரையில் ஏன் புகழுரைகளே காணப்படுகின்றன என்று சிவகுமார் கேட்கிறார். நியாயமான கேள்வி. ஆனால் அதைக் கேட்கும் முன் விமர்சனமாகக் கருத்தரங்கில் பேசப்பட்டதா என்று அவர் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்க வேண்டும். எனக்கே கூட எழுதித் தெரிந்து கொண்டிருக்கலாம். அல்லது திசைகள் கட்டுரைக்கான எதிர்வினையாக, திசைகளுக்கே எழுதி இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கலாம். இதையெல்லாம் விட்டு எள்ளல் மொழியில் தன் பதிவில் இந்தக் கேள்வியை எழுப்புகிறார்.

அவர் என் நூல்கள் மீதான கால்ச்சுவடின் விமர்சனத்தை வெளியிட விரும்பியிருந்தால் அதை நேரடியாக வெளியிட்டிருக்கலாம். திசைகளை இழுக்க வேண்டியதில்லை. அப்படியே அவர் திசைகளைப்பற்றி எழுத வேண்டும் என்றாலும் இந்த மொழியை உபயோகித்திருக்க வேண்டியதில்லை.

கருத்தரங்கில் நான் உவப்பாக ஏற்புரை அளித்ததாக சொல்லி அதே போல காலச்சுவடின் விமர்சனத்திற்கும் பதில் சொல்வேனா என்று வினவுகிறார். நான் என் நூல்களைப் பற்றி எழுதப்படும் எந்த விமர்சனத்திற்கும் பதில் சொன்னதில்லை. அப்படி சொல்வது பண்பாடல்ல. விமர்சனம் என்பது ஒரு கருத்து. ஒருவரது கருத்து. அவ்வளவுதான். அதற்கு மேல் அதற்கு வேறு significance இல்லை. ஒரு கூட்டத்தில் ஏற்புரை வழங்குமாறு அழைக்கப்பட்டால் அந்த அழைப்பை ஏற்று சில வார்த்தைகள் சொல்வது என்பது வேறு. அது ஒரு சபை நாகரீகம். இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் கூடவா சிவக்குமாருக்கு தெரியாது? அந்த இடத்தில் சிவக்குமார் என்ற கபட சந்நியாசி வெளிப்படுகிறார்.
இன்னொரு இடத்தில், ' எமெர்ஜென்சியையே எதிர்த்தவர்' என்று நக்கல் செய்கிறார். நான் எமெர்ஜென்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தேன் என்பது பதிவு செய்யப்பட்ட ஒன்று. எமர்ஜென்சியையே என்பதில் உள்ள ஏகாரம் அவர் செய்யும் ஒரு திரிப்பு. நான் எமெர்ஜென்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்தேன், ஜெயகாந்தன் போல அதற்கு ஜால்ரா போடவில்லை. நான் எழுதிய கதை பாலத்தில் வெளியானது. நான் எழுதிய கவிதை கணையாழியில் வெளி வந்தது. அதை ஆங்கிலத் தொகுப்பிற்காக தேர்ந்தது நான் அல்ல. டஃப்ட் பல்கலை பேராசிரியர் ஆலிவர் பெர்ரி. அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் தமிழவன். இத்தனை சான்றுகள் இருக்கின்றன. இதில் எதற்கு எள்ளல்?

நான் பொய் சொல்கிறேன் என்பதைப் போல ஒரு இடத்தில் எழுதுகிறார். ஒரு இடத்தில் நான் என்னைப் பற்றிய தவறான அல்லது மிகைப்பட்ட பிம்பங்களை இணையத்தில் உருவாக்குகிறேன் என்கிறார். இவையெல்லாம் அபாண்டமான குற்றச்சாட்டுக்கள். நான் என் பதிவுகளில் என்னைப் பற்றிய விபரங்களையோ, படங்களையோ, சுயசரிதைகளையோ வெளியிட்டுக் கொண்டதில்லை. திசைகள் தவிர வேறு மின்னிதழ்களில் எழுதுவது இல்லை. திசைகளில் பொதுப் பிரசினைகள் பற்றி எழுதியிருக்கிறேன். என்னைப் பற்றி எழுதியதில்லை. நான் கலந்து கொண்ட விழாக்களைப் பற்றிய செய்திகளைக் கூட மற்ற வலைப்பதிவாளர்கள் தங்கள் பதிவுகளில் எழுதியவற்றை, அல்லது நாளிதழ்களில் வெளியானவற்றைத்தான் பிரசுரித்திருக்கிறேன். என் நூல்களைப் பற்றி பாராட்டி எழுதிய விமர்சனங்கள் பல பத்திரிககைகளில் வந்திருக்கின்றன. அவற்றை மீள் பிரசுரம் செய்ததில்லை.
இணையம் என்பது ஒரு சிறு வெளி. அதில் இருப்பவர்கள் இணையத்தை மட்டும் படிப்பவர்கள் அல்ல. வெளி உலகப் பழக்கமும் உள்ளவர்கள். அவர்கள் என்னை அவற்றின் மூலம் ஏற்கனவே அறிந்தவர்கள்தான். எனவே எனக்கு பிம்பங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.

எழுத்துத் திறமை இல்லாத என்னை சன் டிவி போஷிக்கிறது என்பதைப் போல ஓரிடத்தில் எழுதுகிறார் ( வஞ்சப் புகழ்ச்சியாக) எனக்கு எழுத்துத் திறமை இல்லை என்றே வைத்துக் கொள்வோம். அதில் என்ன அவமானம். எல்லா மனிதர்களுக்கும் எழுதும் திறமை இருக்க வேண்டுமா என்ன? ஒரே நேரத்தில் என்னை, என்னைப் பிரசுரித்த பத்திரிகைகளை, அதன் ஆசிரியர்களை, அதன் வாசகர்களை அவமானம் செய்கிறார்.

சிவக்குமார் இப்படித் தனிப்படக் காழ்ப்பு உமிழ என்ன காரணம்? Malice! நான் ஜெயகாந்தனை விமர்சித்தது. அவரால் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட மனிதனாகக் கருதப்பட்டு வழிபடப்படும் ஜெயகாந்தனை விமர்சித்ததை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் இதை இன்று மறுக்கலாம். ஆனால் அதற்கான சாட்சியங்கள் அவர் பதிவில் இருக்கின்றன. சினிமா நட்சத்திரத்தின் ரசிகன் படம் சேகரிப்பது போல ஜெகேயை வியந்து எழுதுகிற கட்டுரைகளைத் தொகுக்கிற செயலில் இருக்கிறது.

என்னுடைய எழுத்துக்களை நான் இணையத்தின் மூலம்தான் வெளிப்படுத்த வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை. வலைப்பதிவுகளில் எழுதித்தான் நான் கவனம் பெற வேண்டும் என்ற நிலை இல்லை.
மிகப் பெருமிதத்தோடு சொல்கிறேன்: நான் என் சிறுகதைகளில் தொட்டு எழுதிய விஷயங்களை என்னுடைய சமகாலத்தவர் எவரும் எழுதியதில்லை. அது வைக்கிற தர்க்கங்களை யாரும் வைத்ததில்லை. சான்றுகளும் தெம்பும் இருப்பவர் மறுக்கலாம்

தமிழிலும் வலைபதிக்க முடியும் என்பதை தமிழ் இணைய வாசிகளுக்கு மெய்ப்பிக்கும் பொருட்டே நான் வலைப்பதிவுகளில் அக்கறையும் கவனமும் செலுத்தி வந்தேன். திசைகளைப் படித்து வலைபதிய வந்ததாக பலர் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அது கூட நான் என் பிம்பங்களைத் தயாரிப்பதற்காக மேற்கொள்லும் ஒரு முயற்சி எனத் திரிக்கப்படும் அபாயம் இருக்கிறது என உணர்கிறேன்.

எனவே இனி வலைப்பதிவுகளில் எழுதுவது இல்லை, அவற்றைப் படிப்பதில்லை என முடிவு செய்திருக்கிறேன்.

வலைப்பதிவுகளில் தேர்ந்தவற்றை வாராவாரம் வெளியிடும் பணி இன்னும் ஓர் இரு வாரங்கள் தொடரும். பின் அதுவும் நிறுத்தப்படும்.

வலைப்பதிவுகளில் சிறந்தவற்றிற்குப் பரிசளிப்ப்பதாக திசைகள் அறிவித்த திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லை. அவற்றைத் தேர்ந்தெடுத்துத் தர இசைந்துள்ள நடுவர் குழுவின் முடிவுகளை திசைகள் மதிக்கும்.

இந்தச் சிறு மின் வெளியில் என் மீது நேசம் பாராட்டிய நண்பர்களுக்கு நன்றி. அவர்களை என்றும் நினைவில் கொள்வேன்.

தமிழில் வலைப்பதிவுகளைத் துவக்கவும், அவை பற்றி சிந்திக்கவும் தூண்டிய பத்ரிக்கு சிறப்பாக நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் வலைப்பதிவுகளிலிருந்து வெளியேறக் காரணமான திரு.பி.கே. சிவக்குமாருக்கும் நான் நன்றி சொல்கிறேன். இனி என் தங்க 180 நிமிடங்களை ஆக்கபூர்வமாக வேறு எங்கோ செலவிட முடியும். அதற்காக அவருக்கு நன்றி.

வேதனையுடன்,
மாலன்

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

53 Comments:

Blogger Chandravathanaa said...

மாலன்
உங்கள் வருத்தம் புரிகிறது. சிவகுமார் எழுதியதை நான் வாசிக்கவில்லை.
இனியும் வாசிப்பேனோ தெரியாது.
ஆனால் யாரோ ஏதோ ஒரு விடயத்தை எழுதிவிட்டார்கள் என்பதற்காக நீங்கள் உங்களை இங்கிருந்து வெளியேற்ற வேண்டுமா?
உங்களைக் கலைப்பதற்காகவே கூட எழுதியிருக்கலாம்தானே. நீங்கள் இப்போ வலைப்பதிய மாட்டேன் என்று சொல்லி விட்டுப் போனால்
- உண்மையில் அவர் எண்ணம் உங்களை வெளியேற்றுவதாக இருந்தால் - அவர் வென்று விட்டார் என்றுதான் அர்த்தமாகும்.
யாரும் ஏதும் எழுதினார்கள் என்பதற்காகவோ அல்லது சொன்னார்கள் என்பதற்காகவோ நீங்கள் வெளிநடப்புச் செய்யத் தேவையில்லை.
நீங்கள் எழுதும் வலைப்பதிவு உங்களுடையது. நீங்கள் ஏன் போக வேண்டும்...?

நட்புடன்
சந்திரவதனா

1:39 AM

 
Blogger துளசி கோபால் said...

அன்புள்ள மாலன்,

என்னங்க நீங்க? இப்படிச் சொல்லிட்டீங்க? யார் என்ன எழுதுனாலும் அது அவுங்கவுங்க சொந்தக் கருத்துன்னு நினைச்சுக்கிட்டு நம்ம வேலையை, (நம்ம எழுத்தைத்) தொடரக்கூடாதா?

இப்பத்தான் எழுத்துலகில் புகுந்திருக்கும் எங்களுக்கெல்லாம் என்னதான் சொல்றீங்க?

என்றும் அன்புடன்,
துளசி.

1:39 AM

 
Blogger பத்மா அர்விந்த் said...

அன்பின்மாலன்
உங்களுடன் எனக்கு அதிக தொடர்பு இருந்ததில்லை. ஆனாலெனக்கு மனக்கவலை அதிகமானபோது உங்கள் ஒரு கவிதை எனக்கு ஆறுதல் தந்திருக்கிறது.கேலிப்பேச்சுக்கும் அவதூறுகளுக்கும் பொதுப்பணியிலிருந்து விலகி விடுவதால் பாதிக்கப்படும் எத்தனை பேர்மேலும் துன்பங்களுக்குள்ளாவார் என்பதை நினைத்தே நான் தொடர்ந்து செய்கிறேன். நீங்கள் எழுததால் வலைப்பதிவிற்கோ உங்களுக்கோ நட்டமில்லை. ஆனால், ஆர்வத்துடன் எழுதுபவருக்கு ஆலோசனைதர அனுபவம் மிக்க ஒருவராவது இருக்க வேண்டாமா? யோசித்துப்பாருங்கள்.

2:42 AM

 
Blogger மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

சந்திரவதனாவும் பத்மா அரவிந்தும் சொல்லியிருப்பதையே எதிரொலிக்கிறேன்.

நீங்கள் எழுதும் எல்லாவற்றையும் அப்படியே நான் எடுத்துக்கொண்டதில்லை. ஆனால், புதிதாக வருபவர்களுக்கு நீங்கள் அளிக்கும் உற்சாக வரவேற்பு அவர்களை ஊக்குவிக்கிறது.

சாக்கடைமாதிரி இருக்கு. அழுக்கா இருக்குன்னு ஒதுங்கிட்டா, கடைசில என்ன நடக்கும்னு நினைச்சுப்பாருங்க மாலன். அழுக்குகள்தான் நீக்கமற நிறைந்திருக்கும்.

வலைப்பதிவுகள் அவரவர்கானது. அவற்றில் அவரவர் உள்ளக் கருத்துகளே வெளிப்படுகின்றன. அவற்றில் இருக்கும் காரியவாதத்தனங்களையெல்லாம் படிப்பவர்கள் புரிந்துகொள்வார்கள்.

நீங்கள் இப்படி மூடிக்கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டால் அது வெறும்வாய் மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்ததுபோல இருக்கும்.

இந்தச் சலசலப்பிற்கெல்லாம் ஏன் வலைப்பதிவை மூடிவிடுகிறீர்கள்?

யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும், தமிழில் வலைப்பதிவுகளைப் பலருக்கும் அறிமுகம் செய்துவைத்தவர் நீங்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

2:52 AM

 
Anonymous Anonymous said...

போங்க மாலன்.இதைவிட்டு நீங்குக.பார்ப்பனச் சரக்கு இங்கு விலைபோக.இது யுத்த பூமி.தமிழரின் வெந்த பூமி.இன்னுமொரு துரோகி 'தி பொயின்ட்'என்று துவங்கி தமிழருக்கு எதிராய் எழுதுகிறான்.அவன் போலவே நீரும் இருந்தீர்.போய் வாரும் காணும்!தமிழரின் தாகம் தமிழ்.

3:06 AM

 
Blogger Kasi Arumugam said...

மாலன்,

மேலே உள்ள பலர் சொன்னதுதான். உங்கள் கோபமும் அதில் உள்ள நியாயமும் பற்றி நான் சொல்லமுடியவில்லை. எங்கெங்கோ நடந்தவற்றின் தொடர்ச்சியாக இருக்கும்போலத் தெரிகிறது. ஆனால் நீங்கள் குறிப்பிட்ட, சிவகுமாரின் எதிர்வினை உங்களிடம் ஏற்படுத்தியுள்ள பாதிப்பைக் கண்டு மிகவும் மனம் வருந்துகிறேன். சில சமயம் விவாதத்தினால் ஏதும் பயனிருக்காது என்று உணர்ந்ததுமே அந்த விவாதத்தை அப்படியே துண்டித்துக்கொண்டு விலகிவிடுவது எனக்கும் உவந்த ஒன்றுதான், 'கோழைத்தனம்' என்று சிலர் சொன்னாலுமே. சிவகுமாருனடேகூட எனக்கும் இம்மாதிரி ஒரு அனுபவம் இருக்கிறது. தனிமடலில் விவாதித்தால் அடுத்தவருக்காக ஏதும் பாவனையில்லாமல் விவாதிக்கமுடியும் என்று முயன்றுமே, அதிலும் பயனில்லை என்று உணர்ந்து அதையும் தவிர்க்கவேண்டியிருந்தது. ஆனால் தவிர்த்ததன் ஒரு பலன், பலநாள் கழித்து வேறு ஒரு தளத்தில் சந்தித்துக்கொள்ளும்போது குறைந்தது நடைமுறை நாகரிகமாவது கடைப்பிடிக்க, பேச முடிகிறது.

வலைப்பதிவுகளின் மிகமிக அடிப்படையான ஒரு அம்சம் சுதந்திரம். எனவே எழுதுவதோ, நிறுத்துவதோ அவரவர் விருப்பம். முன்னமே 'நான் சில காலம் நிறுத்துகிறேன்' என்று சொன்ன சிலரிடம் நான் இதைச் சொல்லியிருக்கிறேன். நண்பர்கள் சிலர் 'அடுத்த x நாள்களுக்கு நான் விடுப்பு', அல்லது 'நிறைய எழுதிவிட்டேன் சில நாள் எழுதமாட்டேன்' என்று சொல்லும்போது அதனாலேயே எந்த விதமான எதிர்வினையும் சொல்லாமல் இருக்கிறேன். எனவே நீங்கள் எடுத்திருக்கும் 'விடுப்பு' நல்லதே. ஆனால் 'விடைபெறுதல்' என்று பார்க்காதீர்கள், விடுப்பாக எண்ணி மீண்டும் உந்துதல் வரும்போது எழுதுங்கள், எழுதுவீர்கள்.

வலைப்பதிவுகள் ஒரு சமூக இயக்கம். தொழில்நுட்பம் அளித்த கொடை. முன்னோடிகளான நீங்களெல்லாம் அந்த இயக்கத்திற்கு உந்துசக்திகள். உந்தப்பட்ட இயக்கம் நிற்காது நடப்பது சமூகத்தின் அங்கத்தினர்களைப் பொறுத்தது. தமிழ்மணம் போன்ற முயற்சிகளும் இவ்வகையே. வலைப்பதிவுகள் வளர்வது தமிழ்மணம் போன்ற சேவைகளை நம்பி இல்லை. ஆனாலும் வரலாற்றில் உந்துசக்திகளுக்கான இடம் கட்டாயம் இருக்கும். உங்கள் இடம் அப்படியொரு இடம். உங்களால் உந்தப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்ற முறையிலும் கேட்கிறேன், எத்தனை நாள் இந்த விடுப்பு?

4:54 AM

 
Blogger நற்கீரன் said...

நீங்கள் கூறிய படி தமிழ் மணம் போன்ற ஒரு பொது களம் ஆக்கபூர்வமான கருத்து சொல்பவர்கள் குறிப்பிடத்தக்க அளவு பரவி நிற்பதால்தான் வெற்றி பெறுகின்றது. இதுவே விக்கிபீடியா போன்ற திறந்த களங்களும் எமக்கு கற்று தரும் அனுபவம். அப்படி இருக்கையில், நீங்கள் ஒரு தனிப்பட்ட கருத்துக்கு முரண்பட்டு, வருத்துடன் வெளியே செல்வது சலணமளிக்கின்றது.

4:59 AM

 
Blogger ROSAVASANTH said...

கீழே உள்ளது மாலனின் இன்னொரு பதிவில் நான் எழுதியது. காலையில் எழுந்து அதைத்தான் முதலில் படித்து பின்னூட்டமிட்டேன். அதற்கு பிறகு சிவக்குமாரின் பதிவை படித்தேன். நான் வழக்கமாகவே சொல்லி வருகிற சிவக்குமாரின் நேர்மையினமைக்கு உதாரணமாக அவர் எழுதிய முதல் சில பத்திகளை குறிப்பிடலாம். ஆயினும் முதலில் எழுதிய கருத்தில் மாற்றமில்லை. அது கீழே.

"சிவக்குமாரை நான் எவ்வளவு எதிர்கிறேன் என்று சொல்லத் தேவையில்லை. ஆனால் அவருடய குறிப்பிட்ட பதிவு குறித்து மாலன் சொல்வது எனக்கு ஒப்புதலாயில்லை. சிவக்குமார் எதிர்வினை வைத்ததற்கு உள்நோக்கம், அல்லது மாலன் கூறியது போல் ஜெயகாந்தன் மீதான விமரசனம் என்று காரணம் இருக்கலாம். அதை விமர்சிக்கலாம். ஆனால் அதை நோய்கூறு என்று சொல்வதெல்லாம் ரொம்ப அதிகம். சிவக்குமார் பதிவிற்கு நேரடியாய் பதில் சொல்வதை விட அதிகமாக செய்வது தேவையில்லை என்று எனக்கு தோன்றுகிறது. மாலன் நிலமையில் நான் அதை மட்டுமே செய்திருப்பேன். அதை மீறி இதை சூழலின் நோய்கூறு என்று சொல்லி மாலன் எடுத்த முடிவுகள் எல்லாம் அதீதமாகவே படுகிறது. "

5:32 AM

 
Anonymous Anonymous said...

அன்புள்ள மாலன்,
வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளைத் தொடர்ந்து படித்து வரும் வாசகர்களில்
நானும் ஒருவன். இணையத்தில் தான் எழுதிப் புகழ் பெற வேண்டும்
என்ற நிலையில் நீங்கள் இல்லையென்றாலும், இணையத்தில் நீங்கள் எழுதுவது
ஒரு மகிழ்ச்சிகரமான விஷயம் என்று எப்போதும் நினைப்பவன் நான். எல்லா விதமான விமர்சனங்களையும் வரவேற்று, அதற்கு அவ்வப்போது பதிலும் தக்க சமயத்தில் அளித்து வந்த தாங்கள் (தேர்தல் சமயத்தில் நானும் கூட உங்கள் வலைப்பதிவில் விவாதித்திருக்கிறேன்) நண்பர் பி.கே.சிவக்குமாரின் sub-text
பொருந்திய கட்டுரைக்காக வலைப்பதிவுலகத்தை விட்டே வெளியேறுகிறேன்
என்று சொல்வது ஒரு உணர்ச்சி வேகத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்றே தோன்றுகிறது. பி.கே.சிவக்குமார் தற்போது உங்களின் நீராவி என்ஜின் கட்டுரையைக் கேள்விகள் எழுப்பி, கட்டுரை எழுதியிருக்கிறார். ஜெயகாந்தனை மனச்சிதைவு, புகழ்மயக்கத்தில் நிலை தடுமாறினார் என்று நீங்கள் எழுதிய கட்டுரைக்கு, ஜெயகாந்தனை ஆரம்பத்திலிருந்து படித்து வரும், ரசித்து வரும்
பி.கே.எஸ் மறுத்து, சற்றுக் காட்டமாகவே கேள்விகள் எழுப்பியுள்ளார். நீங்கள்
அதற்கு அளிக்கும் பதிலின் மூலம் இன்னும் பல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும் என்று என்னைப் போன்ற சிலர் நினைக்கும் தருணத்தில்...அந்தக் கட்டுரை வெளியாவதற்கு முன்னரே, வேதனையுடன் விடைபெறுகிறேன் என்று நீங்கள் முடிவெடுத்திருப்பது எனக்கும் வேதனையாய் இருக்கிறது. ரோசாவசந்த் சொல்லியிருப்பது போல, 'விடைபெறுகிறேன்' என்பது கொஞ்சம் அதீதமான முடிவாகவே தோன்றுகிறது.
நேரில் தங்களை சந்தித்த போது, நீங்கள் பாந்தமாய் பழகிய விதம், ஒரு முறை தொலைபேசியில் கூப்பிட்டதற்கே, எனது திரையிடுதலுக்கு வந்த உங்கள் அன்பு மற்றும் தனியே என்னை சந்தித்த போது பேசிய நேசமான வார்த்தைகள் எல்லாம் எனக்கு இன்னும் இனிமையாக நினைவில் உள்ளது. நீங்கள் இணையத்தில் தொடர்ந்து பங்காற்ற வேண்டும் என்று விழையும் நண்பர்களில் நானும் ஒருவன்.

- அன்புடன், அருண் வைத்யநாதன்

6:08 AM

 
Anonymous Anonymous said...

Maalan........

If you leave, then it will not be an real man..... It will give more strength to the opponents........ You have the responsibulity to set right the young writters. At least for the sake of young writter, you have to stay back. Go ahead and blast the writter world. Don't worry about anythings....

6:14 AM

 
Blogger சீமாச்சு.. said...

அன்பின் மாலன்,
உங்கள் வேதனையான கட்டுரைக்குப் பிறகு சிவகுமாரின் பதிவையும் ("இலக்கிய அரசியலின் இரட்டை வேடங்கள்" ) எடுத்துப் படித்தேன்.
சிவகுமாரின் பதிவில் நிறையவே நியாயங்கள் இருப்பது தெரிகிறது. உங்கள் பதிவிலும் தேவைக்ககு அதிகமான
உணர்ச்சிவசப்படலும் தெரிகிறது. அவ்வப்பொழுது எழுதிய விஷயங்களுக்கு நேரடியாகவே சுடச்சுட பலர் முன்னிலையில், சென்சார் செய்யப்படாத விமர்சனம் கிடைப்பது உங்களைப்போல பத்திரிக்கையாளர்களுக்கு புதிது போலத்தெரிகிறது. இதுபோலத்தான்
இன்னொரு பத்திரிக்கையாளரும் செய்தார் சமீபத்தில். தாங்கள் இன்னொருவரைப்ப்ற்றி விமர்சனம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் எழுதலாம் என்னும் உரிமை இருக்கும் போது அடுத்தவர் உங்களைப்பற்றி எழுதும் விமர்சனங்களையும்
தாங்கும் பக்குவம் பெறுதல் வேண்டும். அது இல்லாமல் "ஒரு சீனியர் பத்திரிக்கையாளன் நான். என்னைப்பற்றி யாரும் எதுவும்
விமர்சிக்கக் கூடாது" என்ற மனோபாவத்துடன் அணுகாதீர்கள்.

//
எனக்கு எழுத்துத் திறமை இல்லை என்றே வைத்துக் கொள்வோம். அதில் என்ன அவமானம். எல்லா மனிதர்களுக்கும் எழுதும் திறமை இருக்க வேண்டுமா என்ன? ஒரே நேரத்தில் என்னை, என்னைப் பிரசுரித்த பத்திரிகைகளை, அதன் ஆசிரியர்களை, அதன் வாசகர்களை அவமானம் செய்கிறார்.
//
இது கொஞ்சம் ஓவராகத் தெரியவில்லையா? சிவக்குமார் உங்களைப் பற்றித்தானே சொன்னார்? அண்மையில்
குஜராத் முதல்வர் மோடிக்கு விசா மறுக்கப்பட்டவுடன், "இது இந்திய அரசியலமைப்பின் இறையாண்மைக்கே களங்கம்"
என்று அவர் சொந்த அவமானத்தைத் தூக்கி பொதுவில் வைத்தார். அதற்கும் உங்கள் இந்த வார்த்தைகளுக்கும்
கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியவில்லை..
மனதளவில் இன்னும் முதிர்ச்சி பெற என் வாழ்த்துக்கள்,
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...

6:56 AM

 
Blogger சத்யராஜ்குமார் said...

பின்னூட்டங்கள் அதன் தரத்தையும், மரியாதையையும் இழந்து வருவதாக வருந்தி சில தினங்கள் முன்பு ஒரு பதிவு வெளியிட்டேன். ஏற்கெனவே சோர்வுடன் இருக்கும் பலரை உங்கள் முடிவு மேலும் சோர்வடையச் செய்யும்.

6:56 AM

 
Anonymous Anonymous said...

என்ன சீமாச்சு,

சிவக்குமார் வீட்டில் இரண்டு தடவை சாப்பிட்டவுடன் அவருடைய முந்தைய பதிவை படிக்க முடியாமல் போய்விட்டதா? ;-)

7:14 AM

 
Blogger Mookku Sundar said...

ஒரு விவாதத்தை நேரடியாக நடத்தாமல், இப்படி சுற்றி வளைத்து தாக்கி, அதன் மூலம் அற்பத்தனமாக சந்தோஷங்களைப் பெறுவது என்பது நம்மாட்களுக்கு வாடிக்கை. அது அந்த நேர சந்தோஷம் மட்டும்தான், அதன் ஆயுள் அதிகமில்லை என்பது அவர்களுக்குத் தெரியாது.

என்னைப் பொறுத்தவரை, இதற்கெல்லாம் "விடை பெறுகிறேன்" என்று நீங்கள் சொல்லக்கூடாது. இந்த அசிங்கத்துக்கு பதில் சொல்லக் கூட தேவை இல்லை என நீங்கள் நினைத்தால், மெளனமாக இருக்கலாம். அந்த மெளனம், உங்கள் பதிலைக் கூட பெற அவர்கள் தகுதியற்றவர்கள் என்கிற வகையில் சரியான பதில்.
வலைப்பதிவு என்கிற விஷயத்தை எங்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு, நாங்கள் உங்களுக்கு அடிக்கடி தரும் "மெடல்கள்" இவை என்று நினைத்துக் கொள்ளுங்கள் :-(. மெடலை தூக்கி கடாசிவிட்டு தொடர்ந்து எங்களுடன் வாருங்கள்..
இது என் வேண்டுகோள்.

7:17 AM

 
Blogger எம்.கே.குமார் said...

அன்பு மாலன் அவர்களுக்கு,

வலைப்பூக்களின் ஆரம்பம் முதல் அவற்றில் தாங்கள் காட்டிவரும் ஆர்வமும், தொண்டும் பாராட்டப்படக்கூடியது. உண்மையில், ''அட! மாலனெல்லாம் நமக்கு பின்னூட்டமிடுகிறாரே என்று வலைப்பூக்கள் ஆரம்பித்தவர்கள் இங்கே அதிகம்!'

புற்றீசல்கள் போல கிளம்பி வளரும் இவற்றில் இனிமேல் எதையும் படீக்கவோ எழுதவோ நேரமிருக்காது. (உருப்படியாய் இருக்குமா என்பது பெரிய கேள்வி!) (ஏற்கனவே பல மடற்குழுக்கள் படித்து மாதமாகிறது!) காசி, இப்போதே சிறந்ததையும் அதிக மார்க்கு வாங்கியதையும் போட ஆரம்பித்துவிட்டார். காலை பத்து மணிக்கு போட்ட பதிவு பதினொரு மணிக்கு கீழே சென்றுவிடுகிறது! {:-)} அடுத்து வேறு ஏதேனும் கொண்டு வருவார். இப்படிப்போகும் நிலைமையில் ஒருநாள் எல்லாவற்றையும் இழுத்து மூட்டை கட்டிவிட்டு பொண்டாட்டியையும் பிள்ளையயும் கோர்ட் வாசலில் இருந்து கூட்டி வரவேண்டிய நிலைமை வரலாம். :-)

இணையத்தில் எழுதுபவர்களுக்கு இலக்கியத்தோடு கொஞ்சம் பாலம் ஏற்படுத்துவதில் சுஜாதா, பாரா(பொறுத்துப்பொறுத்துப்பார்த்தார், நேரவிரயம் கண்டு நிம்மதியாய் ஓடிவிட்டார்!), இரா.மு, ஜெ.மோ(ரொம்ப அடக்கி வாசிப்பார் இந்த கச்சடாவெல்லாம் கவைக்குதவாது என்பது தெரியும்!), ஞானி வரிசையில் நீங்களும் இருந்தீர்கள். நான் எதிர்பார்த்த மாதிரியே நடந்துவிட்டது!

எப்போதாவது ஒரு இன்லெண்ட் லெட்டரில் வரும், 'ஒரு பிடி சேற்றை' அள்ளி தூர எறிந்துவிட்டு, எழுத ஆரம்பித்துவிடுபவர்களுக்கு இப்படி முகத்திற்கெதிராய் அளவுக்கதிகமாய் சேற்றை பார்ப்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்!

தாமரை இலை தண்ணீர் போல 'ஒட்டாமல் வாழ்ந்தால்' நிற்கலாம் என நினைக்கிறேன். தண்ணீர் இருந்தால்தான் வாழ முடியும் என்றிருந்தாலும் தண்ணீரோடு கலந்து உறவாடி வாழ வேண்டியது அதற்கு அவசியமில்லை.

உங்களது 180 மணி நேரம் இருக்கட்டும். உங்களுக்கும் ஜெ.மோ வுக்கும் எப்படி இவ்வளவு நேரம் கிடைக்கிறது என்று நான் மண்டை காய்ந்து போகிறேன். இணணயத்திலும் சரி மற்ற அலுவல்களிலும் சரி.

இந்த பிரிவு மற்ற சில ஆக்கபூர்வ விஷயங்களுக்கு உங்களுக்கு உதவுமாயின் சென்று வாருங்கள்.

கண்டதெற்கெல்லாம் பதில் சொல்லி காலம் கழிப்பது விரயத்தின் உச்சம்!

அண்மையில் அனுராக் வலைப்பதிவில் தங்களது பேட்டியைப் படித்தேன். 'பழைய ஜெயகாந்தனைப் பிடிக்கும்' என்று நீங்கள் சொல்லியிருந்ததையும் அதற்கு சில நாட்களுக்கு முன் நான் ஆர்வமுடன் வாங்கிப்படித்த 'ஹரஹரசங்கர' நாவலின் ஒற்றுமையையும் நினைத்து (சாரு, ஒரு கூட்டத்தில், ஹரஹரசங்கராவை ஜெகே எழுதினாரா? அவர் எழுதுற வேலயை விட்டு ரொம்பநாளாச்சுங்க என்று ஒரு பதில் சொன்னார்!) இதனை ஒரு பதிவாக எழுத எண்ணியிருந்தேன். (எழுதிவிட்டேன், போடவில்லை!) நிற்க.

இதற்கிடையில் பி.கே.எஸ் பதிவை இப்போதுதான் நான் படித்தேன்.

ஜெகேவை 'முழுமையாக' இன்னும் படிக்க்வில்லையாதலால் உங்கள் இருவருடைய கருத்துமோதல்களிலும் நிஜம் தெரியவில்லை எனக்கு. ஆனால் தனிமனித தாக்குதல்களுக்கு கொஞ்சம் கூட பஞ்சமில்லை என்றே தோன்றியது.

ஜெகேயைப் பற்றி நீங்கள் எழுதியதில் அளவுக்கதிகமான "யாரையோ திருப்திப்படுத்தும் நோக்கு" இருக்கிறது என்று பி.கே.எஸ் நினப்பாரானால், பி.கே.எஸ்சினுடைய பதிவில் "கொஞ்சம் ரசிகத்தன்மை" இருப்பது என்னால் உணர்ந்துகொள்ளமுடிகிறது!

ஹர ஹர சங்கராவை ஜெயகாந்தன் எழுதியதுபோல 'ஹர ஹர ஜெயகாந்தா'வை பி.கே.எஸ் எழுதியிருப்பது தெரிந்தது. (ஆனால் பி.கே.எஸ் ஜெ.கேயைப் பற்றி நிறைய தெரிந்தவர். அவரைப்படித்தவர்)

ஆகையால் தனிமனித தாக்குதல்களுக்கும் படைப்புகளின் பொதுமதிப்பீடுகளுக்கும் யாரும் இடம் கொடுக்காதீர்கள் என்பதே என் வேண்டுகோள்!

நன்றி, மீண்டும் வருக!

எம்.கே.குமார்

7:39 AM

 
Blogger சீமாச்சு.. said...

என்ன அனானிமஸ்,
இப்படி பெயர் சொல்லாமல் என் சொந்த விஷயங்களைத் தேவையில்லாமல் எடுத்து விடுகிறீர்களே.
இந்த மாதிரி விஷயங்கள் தான் பிடிக்கவில்லையென்று மாலன்சார் "நான் போறேன்ப்பா.."
என்று சொல்கிறார். அவர் பதிவின் கீழேயே இப்படியா?
எல்லோரும் எனக்கு நண்பர்களே. அவரின் முந்தைய பதிவையும் படித்தேன். இப்பொழுதுதான் படித்தேன்.
எதுவும் தவறாகத்தெரியவில்லை. ஒரு கல்லூரி நடத்திய கருத்தரங்கத்தில் எந்தவிதமான எதிர்மறையான
விமர்சனங்களும் வரவில்லை என்பதுதான் ஆச்சர்யமாக இருந்தது. ஆனாலும் ஒரு கல்லூரிக்கு விருந்தினராக
வந்திருந்தாரேயானால், அவரைப் பற்றி எதிர்மறை கருத்துக்கள் நாகரீகம் கருதி சொல்லமாட்டார்கள். சொல்ல
விடமாட்டார்கள். கருத்தரங்கம் என்பதற்குப்பதில் "பாராட்டரங்கம்" என்று வைத்திருந்தால் அதன் மதிப்பே தனிதான்.
மாலனின் ஆக்கங்களைப் பற்றிய "கருத்தரங்கத்திற்கு" அவரையே விருந்தினராக அந்தக் கல்லூரி அழைத்திருந்ததுதான்
நாகரீகமான தடங்கல்களைப் போட்டுவிட்டது.
அப்படியே கூட அது "பாராட்டரங்கமாக" இருக்கும் பட்சத்தில் அதை மாலனின் திசைகளிலேயே வெளியிட சில
கூச்சங்களை எழுப்பியிருக்கும்.

சிவக்குமார் வீட்டு சாப்பாடு அருமை. அந்த தக்காளி ரசம் உண்மையாகவே சுவையாக இருந்தது.
சொல்ல மறந்துவிட்டேனே.. என் கருத்துக்கள் என் மூளையிலிருந்து வருபவை.. வயிற்றிலிருந்து வருபவையல்ல..

என்றென்றும் அன்புடன்
சீமாச்சு..

7:46 AM

 
Blogger Mahamaya said...

இந்த அசிங்கத்துக்கெல்லாம் ஏன் இவ்வளவு மதிப்புக் கொடுக்கிறீர்கள்? உருப்படியாக ஒரு படைப்பும் கொடுக்க இயலாதவர்கள் இதுபோல் சிறந்த படைப்பாளிகளை இகழ்ந்து அதன்மூலம் ஒரு அங்கீகாரம் தேடுகிறார்கள். முருகன், ஹரி கிருஷ்ணன் போன்றவர்களையும் இந்த நபர் இதுபோல் ஏசியிருக்கிறார். இந்த சாதனம் எவ்விதக் கட்டுப்பாட்டுக்கும் உட்படாததால் இதுபோல் பிறரை வசைபாடியே பெருமை பெற முயல்கிறார்கள். அவர்களை முழுதுமாக ignore செய்வதுதான் சரியான வழி. கொஞ்ச நாளில் சரக்கு விலைபோகவில்லை என்று ஏறக்கட்டி விடுவார்கள்.

7:49 AM

 
Anonymous Anonymous said...

I agree with Kasi and Alwacity you
can take a little brake.You are
inspitation for lot of young writers.Your guidance needed for young writers.I read many of your
creations.Hope that you will come
back after some time.

8:13 AM

 
Blogger Vijayakumar said...

மாலன் அவர்களே,

முன்பெல்லாம் தாங்களை டிவி,குமுதம் வாயிலாக தான் தெரியும். வலைப்பதிவுக்கு வந்த பின் எல்லா பதிவுகளுக்கும் வந்து சகஜமாக பின்னூட்டம் விடுவதை அறிந்து பெருமையுடன் நண்பர்களுடன் மகிழ்ந்துக் கொண்ட காலங்களும் உண்டு. உண்மையில் ஏனோ தானோ என்று ஆரம்பித்த என் வலைப்பதிவு தங்களைப் போன்றவர்கள் சில நேரம் பின்னூட்டமிட்டதால் நன்றாக எழுத வேண்டும் என்ற பயமும், பொறுப்பும் கூடியது.

தங்களின் படைப்புகளை படிக்க ஆரம்பித்த போது எனக்குள் ஏற்பட்ட பிரம்மிப்புக்கு அளவேயில்லை.முக்கியமாக உங்களின் 'சொல்லாத சொல்' படைப்பு என்றென்றும் போற்றப்படக்கூடியது. எவ்வளவு விசய ஞானத்தை உள்ளடக்கியது என்ற ஆச்சிரியம் என்னை விட்டு இன்னும் விலகவில்லை.

ஜெ.கனை படித்ததில்லை. இருந்தும் உங்களை குறைத்து மதிப்பீடப்பட்டுள்ளது வருந்ததக்கது.விடுப்புக்கு பின் மீண்டும் எங்களுக்கு வழிக்காட்டியாய் இருப்பீர்கள் என நம்புகிறோம்.

8:13 AM

 
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

மாலன்,
இதைப் படித்ததும் எனக்கு இந்த பழமொழி தான் நினைவு வந்தது: "ஏரி காவு கேக்கும்னு பயந்து கால் கழுவாம இருக்க முடியுமா?"

நீங்கள் இங்கிருந்து விலகுவதற்கு சிவகுமார் தான் காரணமென்றால் உங்களைப் போல் ஏராளமானவர்கள் விலகியிருக்கவேண்டும். எனக்கும் சிவகுமாரிடம் ஒரு சிறு அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் அவரிடம் இருந்துதான் ஒதுங்கியிருக்கிறேனே தவிர பொதுக் களத்திருந்தல்ல. 'திண்ணை'யில் கலைஞர்-ஜெயமோகன் சர்ச்சையின்போது சந்தடிச் சாக்கில் இடையில் புகுந்து சம்பந்தமேயில்லாமல் அண்ணா மறைந்தபோது முப்பத்தைந்து வருடங்களுக்கு முன் ஜெயகாந்தன் பேசியதை தட்டச்சு செய்துப் போட்டு திராவிட இயக்க எதிர்ப்பாளர்களின் அரிப்புக்கு அவல் போட முயன்றார். நானும், நண்பர் சங்கரபாண்டியும் அதை எதிர்கொண்ட போது அவருடைய தர்க்கத் திறனைப் பார்த்து மலைத்துபோய் ஒதுங்கிக்கொண்டேன். சங்கரபாண்டி சிலவாரங்கள் முயற்சித்து பிறகு விட்டுவிட்டார். பிறகு சிவகுமாரையும், என்னையும் அறிந்த பொது நண்பர் தனிப்பேச்சில், ஜெயகாந்தன் சிவகுமாரின் குடும்ப நண்பர் என்பதால் தான் இந்த தாங்கு தாங்கிறார் என்று சொல்லி அவருடைய 'ஜெயகாந்த பக்தி'யை விளக்கினார். ஜெயகாந்தனை குல தெய்வமாக வழிபடும் ஒருவருக்கு இப்படி ஆவேசம் பொத்துக்கொண்டு வருவது இயற்கை. உயர்நிலைப் பள்ளிக் காலத்தில் என் வகுப்பில் தீவிர எம்.ஜி.ஆர். ரசிக நண்பர்கள் இருந்தார்கள். ஜெயகாந்தனை விமர்சிப்பவர்கள் மீது சிவகுமார் பாயும்போதெல்லாம் அவர்கள் நினைவு தான் வரும். அவர்களுக்கு யாராவது எம்.ஜி.ஆரை சின்னதாக ஏதாவது சொன்னால் கூட தாங்க முடியாது. "ங்கோத்தா" என்று ஆரம்பித்து எம்.ஜி.ஆரின் மகிமையைப் புகழ்வதைவிட சினிமாப் பற்றியானல் சிவாஜியையும், அரசியலானால் கருணாநிதியையும் நையப் புடைப்பதில் தான் அவர்கள் கவனம் இருக்கும். அத்தகைய பாமரத்தனம் தான் சிவகுமாரின் பதிவுகளில் வெளிப்பட்டிருக்கிறது. தன்னையும், தன் நண்பர்களையும், குலதெய்வத்தையும் துளிகூட கூச்சமின்றிப் புகழ்ந்து கொள்வதும் தனக்குப் பிடிக்காதவர்களின் மீது சேறுவாரி இறைப்பதும் தான் சிவகுமார் பாணி. இதற்காகத் தான் நீங்கள் விலகுகிறீர்கள் என்றால் வேண்டாம் என்று சொல்வேன். ஏனெனில் நீங்கள் இங்கிருந்து விலகிவிடுவதால் அவர் ஒன்றும் சும்மா இருக்கப்போவதில்லை. அவரிடமிருந்து வாங்கிக் கட்டிக்கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால் அவருடைய குலதெய்வத்தை நிந்தனை செய்யவோ, அவரை, அவருடைய நண்பர்களையோ குறை சொல்லக்கூடாது. அவ்வளவுதான். மற்றபடி உங்கள் "Golden 180" ஐ வேறு ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தக் கொள்ள முடியுமென்றால் தாராளமாக விலகுங்கள். இணைய விவாதங்களில் பங்கெடுத்து ஏகப்பட்ட நேரம் செலவழித்த சொந்த, நெருங்கிய நண்பர்களின் அனுபவங்களை வைத்து சொல்கிறேன்.

இருந்தாலும் "குரங்கு கையும், சிரங்கு பிடித்தவன் கையும் சும்மா இருக்காது" என்கிற மாதிரி இதிலிருந்து விடுபடுவது கடினம்.

நேரடி சம்பந்தமில்லாதவை:
ஜெயகாந்தன் ஞானபீட விருது பெற்றதையொட்டி நண்பர் பாவண்ணனின் கட்டுரையில் சிவராம கரந்த் உள்பட சில இலக்கியவாதிகளின் பெயர் குறிப்பிட்டுள்ளார். இருவரின் இயக்கங்கள் நேரெதிரானவை. இறுதிமூச்சு வரை கரந்த் ஒரு நிறுவன எதிர்ப்பாளியாக (எந்த கட்சியாக, மத நிறுவனமாக இருந்தாலும்), செயல் வீரராக இருந்தவர். ஜெயகாந்தன் வெறும் selective critic ஆக, வாய்ச்சவடால் வீரராகத் தான் இன்றுவரை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார். எமர்ஜென்சியை எதிர்த்து "பத்ம பூஷன்" விருதைத் திருப்பிக் கொடுத்தவர் கரந்த். எமர்ஜென்சிக்காக வக்காலத்து வாங்கியவர் ஜெயகாந்தன். இந்த லட்சணத்தில் அவரை "தமிழகத்தின் மனசாட்சி" என்றெல்லாம் பீலாவிடுவது தமிழகத்திற்கு அவமானம். அதேபோல ஜெயகாந்தனுக்கு ஞானபீட விருது கொடுக்கப்பட்டது தமிழுக்கு கிடைத்த மரியாதை என்றெல்லாம் புகழ்வது தமிழைச் சிறுமைப்படுத்துவதும் செயல். ஏனென்றால் தமிழிலக்கியம் என்பது ஜெயகாந்தனில் தொடங்கி ஜெயகாந்தனில் முடிந்துபோகும் விஷயமில்லை.

மற்றவர்களைப் போல ஜெயகாந்தனை ஜெகே என்று குறிப்பிடுவதை பிரக்ஞைப் பூர்வமாக தவிர்க்கிறேன், தட்டச்சு வேலை குறையுமென்றாலும். ஜெகே என்றால் உடனடியாக நினைவுக்கு வரவேண்டியது ஜெ. கிருஷ்ணமூர்த்தி. நிறுவனத்திற்கும், தனிமனித ஈகோவுக்கும் எதிரானது ஜெ. கிருஷ்ணமூர்த்தியின் இயக்கம். ஜெயகாந்தனின் உளறல்கள் கேடுகெட்ட நிறுவனங்களுக்கு ஆதரானவை. அவர் ஒரு ego maniac. பெயரைச் சுருக்க வேண்டுமென்றால் த.ஜெ. (தண்டபாணி ஜெயகாந்தன்) என்று குறிப்பிடலாம். ஆங்கிலத்திலும் அவருடைய பெயர் D. Jayakanathan என்று தான் குறிப்பிடப்படுகிறது.

8:47 AM

 
Blogger Narain Rajagopalan said...

பின்னூட்டமிட்டவர்களின் கருத்துக்களின் எதிரொலிதான் இங்கேயும். இதனை இவ்வளவு பெரிய விஷயமாக பார்க்க தேவையில்லை என்பது என் கருத்து. இதைத் தாண்டி, நாம் கடற்கரையில் விவாதித்தது போலவே, இது ஒரு ப்ரீ மீடியா. இதில் எல்லாவிதமான விஷயங்களும் இருக்கும். இதில் நமக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு செல்வதுதான் இயல்பாக இருக்கும். ஒரு தனிநபர் எழுதியதற்காகவோ, எதிர்வினை செய்ததற்காகவோ வெளியேற விரும்பினால், நிறைய நபர்கள் வெளியேற வேண்டியிருக்கும். உங்களின் 180 தங்க நேரத்தில் வேறெதாவது உருப்படியாக செய்யும் யோசனை இருப்பின் (வீக்கிபீடியா, வீடியோ பதிவுகள்) தாராளமாக செல்லுங்கள். அப்படியில்லாமல் விடை பெறுவது தான் குறிக்கோளாய் இருக்கிறீர்கள் என்றால், உங்களின் முடிவினில் நுழையும் அதிகாரம் இங்கு யாருக்கும் கிடையாது. இதை நீங்கள் கொஞ்சம் அதீதமாக எடுத்துக் கொண்டு விட்டீர்களோ என்கிற ஐயம் இருக்கிறது. இருப்பினும் உங்களின் முடிவை மாற்றும் எண்ணங்களில்லை. அடுத்தவர்களை விட உங்களுக்கு வலைப்பதிவுகளின் வீச்சு நன்றாக தெரியும். வேறொரு உருவத்தில் உங்களை மீண்டும் சந்திப்போம் என்கிற நம்பிக்கையுடன், சென்று வாருங்கள்.

8:51 AM

 
Blogger மீனாக்ஸ் | Meenaks said...

உங்களுடைய இந்த முடிவு துரதிர்ஷ்டவசமானது. மிக வருத்தத்தை அளிக்கிறது. மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டுகிறேன்.

9:13 AM

 
Blogger பினாத்தல் சுரேஷ் said...

மாலன்,

வலைப்பதிவுகளை திசைகள் பரிசு மற்றும் அங்கீகாரத்தின் மூலம் அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் நீங்கள், சில பின்னூட்டங்களினால் அவதிப்பட்டு இப்படி ஒரு அதீத முடிவை எடுக்கக் கூடாது.

பல ஊடகங்கள் மூலம் ஏற்கனவெ பெரிதும் அறியப்பட்ட நீங்கள் படிக்கிறீர்கள், பின்னூட்டம் இடுகிறீர்கள் என்பதெல்லாம் என்னைப்போன்ற ஆரம்பகட்ட எழுத்தாளனுக்கு கிடைத்து வந்த மிகப்பெரிய ஊக்கம்.

மறுபடியும் பரிசீலியுங்கள்.

9:37 AM

 
Anonymous Anonymous said...

மரத்தடியில் இருந்து மதி. வலைப்பதிவுகளில் இருந்து நீங்களா?

மாலன், நீங்கள்பாட்டுக்கு எழுதுங்கள்.

பொதுக்காரியத்துக்கு உங்களைப்போலச் சிலரே எஞ்சியிருக்கின்றனர். பி.கே.சிவகுமாரின் 'ஹரஹர ஜெயகாந்த'ப் பதிவைப் படிக்க வேண்டியதுதான். இவ்வளவு முக்கியத்துவம் தரவெண்டியதில்லை என்பது என் அபிப்ராயம்.

இணையத் தமிழருக்கு இளைஞருக்கு உங்கள் சேவை தேவை.

இவண்,
குமார்

9:43 AM

 
Blogger ilavanji said...

அன்பு மாலன்,

கலைஞர் திரு. கருணாநிதியிடம் கோவையில் ஒரு நிருபர் "முந்தய காலத்தில் MGR கொடுத்த அடியை விட இது பெரிய அடியா?" என்று ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு கலைஞர் சொன்ன பதில் "என்னை யாராலும் அடிக்க முடியாது! நான் அடிச்சா நீ தாங்குவயா?"

எவ்வளவு பெரிய தலைவர் அவர்! எவ்வளவு வருட அரசியல் அனுபவம் அவருக்கு! அவர் பார்க்காத தலைவர்களா? பழகாத மனிதர்களா? அவர் சந்திக்காத பேட்டிகளா? எத்தனை இடக்கு மடக்கான கேள்விகளையும் தனக்கே உரிய நகைச்சுவையுடன் பதிலளித்த அவரால் ஒரு பத்திரிக்கை நிருபரின் இந்த கேள்விக்கு கோவப்படாமல் பதிலளித்திருக்க முடியாதா? எந்த ஒரு மனிதருக்கும் சுயகௌரவம் உண்டு. அந்த நிருபர் கேட்டது உண்மையாகவே இருப்பினும் ஒரு சபையில் கலைஞரின் சுயகௌரவத்துக்கு மதிப்பளிக்காமல் தனிமனித ஈகோவை தாக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி கேள்விகேட்டது அந்த நிருபரின் தவறுதானே தவிர அதற்கு கோவமாக பதிலளித்த கலைஞரின் தவறல்லவே! உங்களின் இந்த முடிவையும் உங்கள் சுயகௌரவத்தின் மீதான தாக்குதலின் விளைவாகவே பார்க்கிறேன்!

மேற்சொன்னது போன்ற நிகழ்வுகளுக்காக கலைஞர் அரசியல் வாழ்வைவிட்டு வெளியேறியிருந்தால் நட்டம் அவருக்கும் அவரது இயக்கத்துக்கும் ஏற்பட்டிருக்கும். ஒரு தனிநபரின் விமரிசனக்கட்டுரைக்காக நீங்கள் இங்கிருந்து வெளியேறுவதால் ஏற்படும் நட்டம் உறுதியாக எங்களுக்குதானே தவிர உங்களுக்கல்ல!

பல்வேறு ஊடகங்களில் சிறப்பாக செயல்பட்டு வரும் அனுபவம் வாய்ந்தவர் நீங்கள். அந்த ஊடகங்களின் வளர்ச்சியையும், காலப்போக்கில் அதன் வடிவத்தில் ஏற்படும் மாறுதல்களையும், வருங்காலத்தில் அதன் நிலையையும், அதற்கு நாம் செய்ய வேண்டிய பங்களிப்பையும் பற்றிய உங்களது கருத்துக்களை இளையதலைமுறையினருக்கு அளிக்கக்கூடிய தகுதி பெற்றவர் நீங்கள். அளிக்கவேண்டும் என்ற விருப்பம் கொண்டவர்கள் நாங்கள். படைப்புலகில் உங்களுக்கு இருக்கும் இத்தனை வருட அனுபவத்தில் நீங்கள் தனிநபர் வசைகளையோ அல்லது காட்டமான விமர்சனங்களையோ சந்தித்ததேயில்லையா? அப்போதெல்லாம் இந்த முடிவைத்தான் எடுத்தீர்களா? இத்தனைநாள் எத்தனையோ தனிநவர் தாக்குதல்கள் இங்கே நடந்தபோதெல்லாம் அதனைப்பற்றிய உங்கள் கருத்துகள் இங்கே பதிக்கப்படவில்லை. உங்களைப்பற்றிய விமரிசனக்கட்டுரையால் மட்டும் இங்கே புற்றுநோய் செல்கள் வளரத்தொடங்கியிருப்பதாக சொல்லி விலகுவது அதீதமாகவே படுகிறது.

P.S : இணையதளத்தில் எனக்கு இருக்கும் முழுசுதந்திரம் என்ற தகுதியின் அடிப்படையில்மட்டுமே எழுதியது!

12:45 PM

 
Blogger பாலு மணிமாறன் said...

இப்போதும் சோர்வுறும் போதெல்லாம் உங்களின் "இளஞ்செழியன் ஆரம்பித்த மெஸ்"ஸை படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன்.வாழ்க்கை மீது நம்பிக்கை ஏற்படுத்துகிற எழுத்துகள் உங்களுக்குச் சொந்தம்.என்னைப் போன்றவர்களுக்கு தமிழ் இணையத்தின் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அதை ஏன் நீங்களும், நாங்களும் இழக்க வேண்டும்?

இணையத்தில் எழுதுபவர்கள் - தினமும் பார்க்கக்கூடிய மனைவியாகவோ, பக்கத்து வீட்டு முதியவராகவோ இல்லாதபட்சம், அவர்களைப்பற்றி, அவர்களது எழுத்து பற்றி எது வேண்டுமானாலும் எழுதலாம் என்ற வசதியும், வக்கிர வெளிப்படும் இணைய உலகில் இருக்கிறது. வழக்கமான ஊடகங்களில் இருந்து மாறுபட்ட - இது, புதிய போர்முனை.இங்கு போராளிக்குத்தேவை புதிய உத்திகள்.பின்வாங்கல் அல்ல!

உங்கள் அன்பு மலேசிய நண்பர் மறைந்த ஆதிகுமணனுக்கு நேராத அவமானங்களும், ரத்தகாயங்களும் உங்களுக்கு நேர்ந்து விடவில்லை என்பது என் பணிவான கருத்து. " விழுந்தாலும் விதையாகத்தான் விழுவேன் " என்று அடிக்கடி சொல்லும் ஆதிகுமணனின் ஆன்மா உங்களின் இந்த முடிவை ஒப்புக் கொள்ளூமா?

நான் உங்களிடம் பார்க்க விரும்புவது - மெஸ் ஆரம்பித்த இளஞ்செழியனை...முற்பாதையில் ரத்தம் சொட்ட நிமிர்ந்து நடந்த ஆதிகுமணனை...சொல்லாத சொல்லை சொல்லத் துணிந்த மாலனை...

ஒரு நிமிடம் யோசியுங்கள் - சரித்திரம் உங்களை சரியாக அடையாளம் காட்ட வேண்டும்!

1:21 PM

 
Blogger suratha yarlvanan said...

//எத்தனை நாள் இந்த விடுப்பு? //

சாவியின் திசைகள் காலத்திலிருந்தே உங்களைத்தெரியும்.காணாமல் போகாத தொடர்ச்சியான ஒரு பயணி நீங்கள்!


அன்புடன்
சுரதா

4:06 PM

 
Blogger Pavals said...

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது...
தூரத்தில் ஜொலிக்கும் நட்சத்திரங்கள் சிலநேரம் நெருங்கி சென்று பார்க்கும் போது ஏமாற்றிவிடும்... அதுனால நீங்க இங்கே எல்லாம் எழுதாம இருக்கிறதே பெட்டர் மாலன் சார்.. ஏதுக்கு வீனா இங்க எழுதி, நிறையா பேருக்கு ஆதர்ச மனிதரா இவ்ளோ நாள் இருந்துட்டு, இங்க வந்து இப்படி சின்ன புள்ளத்தனமா கோவிச்சுகிட்டு,.. வேண்டாம்... விடுறுங்க சார்!!
(ஆனா யாராவது 'எள்ளல்' தொணியில எழுதுறாங்கன்னு திசைகள்'அ நிறுத்திறாதீங்க..)

4:48 PM

 
Blogger Thangamani said...

மாலன்,

வலைப்பதிவுகள் சுதந்திரமான இடம். ஓவ்வொருவரும் தாம் நினைப்பதை மட்டும் எழுதுவதில்லை; தாம் என்னவாக இருக்கிறோம் என்பதையும் எழுதுகிறார்கள். வாசகர்கள் வரிகளை ம்ட்டும் வாசிப்பதில்லை; வரிகளுக்கு இடையிலும் வாசிக்கிறார்கள். வாசகர்களின் மேல் நம்பிக்கை வைத்து (அவர்கள் எவ்வளவு குறைவானவர்களானாலும்) நீங்கள் திரும்ப எழுதவேண்டும்.

ஜெயகாந்தன் ஒருமுறை குறிப்பிட்டதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். "முழங்குவதற்கு தமக்கென ஒரு முரசில்லாதவ்ர்கள் தான் ஜெயகாந்தன் என்ற இந்த முரசை முழங்குகிறார்கள்".

இது இங்கும் பொருந்தும்.

நன்றி!

4:49 PM

 
Blogger ஜெ. ராம்கி said...

வருத்தமான விஷயம். மாலனின் திசைகளால் மட்டுமே வலைப்பூக்கள் பக்கம் வந்தேன். மாலன் போன்ற பெரிய மீடிய புள்ளிகளுடன் என்னால் நெருங்கி பழக முடிந்ததற்கு இணைய உலகம்தான் காரணம். சுனாமி பணிகளின்போது வெகுவாக ஊக்கப்படுத்தியதுடன் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளையும் சொன்னவர். இதெல்லாம் அவர் இணையத்தில் இருந்ததால் மட்டுமே எனக்கு சாத்தியமானது. ஏகப்பட்ட எழுத்தாளர்கள் வலைப்பூக்கள் பக்கமாக உலா வந்தாலும் இன்னும் தமிழ் மீடீயாவின் கவனத்தை பெறுமளவுக்கு வலைப்பூக்கள் வரவில்லை என்கிற நிலையில்... இது போன்ற நிகழ்வுகள் நமக்கெல்லாம் பெரிய பின்னடைவுதான்.

மாலன் மறுபரிசீலனை செய்வார் என்கிற நம்பிக்கையில் நானும் காத்திருக்கிறேன்.

5:29 PM

 
Blogger Aruna Srinivasan said...

மாலன் முடிவு சரிதான் என்று எனக்குத் தோன்றுகிறது - அவர் ஆரம்பத்தில் வரிசையாக வைத்திருக்கும் காரணங்களுக்காக.

இங்கே எழுதியுள்ள பலர் அதைப் பற்றி விவாதிக்கவில்லையே என்று தோன்றுகிறது. வலைப்பதிவுகளின் தரம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று அடிக்கடி கேள்வி எனக்குள்ளும் எழுந்து கொண்டுதான் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் தாக்குதல்கள் அதிகமாகி, எழுதும் ஆர்வம் இருக்கும் பல இளைய தலைமுறையினர் விலகும் நிலை ஏற்கனவே உருவாகி வருகிறது.

ஆங்கிலப் பதிவுகளைப் போல் பரவலாக பரவியிருந்தால் நம் ரசனைக்கு ஒத்துவராத இடங்களில் ஒதுங்கிப் போய்விடலாம். ஆனால் 500க்கும் கீழே இருக்கும் - தமிழ் மணம் என்ற ஒரு குடையின் கீழ் ஒரு அமைப்பு போல், ஒரு பொது மன்றம் போல்- இயங்கி வரும் தமிழ் பதிவுகளில் பதியப்படும் தரம் பற்றி அக்கறை இல்லாமல் இருக்க முடியுமா? நாளை தமிழ் மணத்தையும் தாண்டி ஆயிரக்கணக்கில் பெருகும்போது என்ன மாதிரியான Template அடிப்படையில் அது விரிந்து பரவும்? இதற்கு நாம் என்ன செய்யப்போகிறோம்?

இருந்தாலும் காசி சொல்லும் "....உந்தப்பட்ட இயக்கம் நிற்காது நடப்பது சமூகத்தின் அங்கத்தினர்களைப் பொறுத்தது...."

என்பதிலும்

பத்மா சொல்லும் "....கேலிப்பேச்சுக்கும் அவதூறுகளுக்கும் பொதுப்பணியிலிருந்து விலகி விடுவதால் பாதிக்கப்படும் எத்தனை பேர்மேலும் துன்பங்களுக்குள்ளாவார் என்பதை நினைத்தே நான் தொடர்ந்து செய்கிறேன்......"

என்பதிலும்

மதி சொல்லும் "......நீங்கள் இப்படி மூடிக்கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டால் அது வெறும்வாய் மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்ததுபோல இருக்கும்...."

என்பதிலும்

அர்த்தமிருக்கிறது.

நாளை என்றோ ஒரு நாள் அடுத்த தலைமுறையினர் இணையத்தில் தமிழில் விஷய ஞானம் தேடும்போது இன்றைய பல பதிவுகள் உபயோகமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இன்னும் இருக்கிறது.

மாலன், யோசியுங்கள்.....

6:01 PM

 
Blogger ROSAVASANTH said...

எனது பழைய பின்னூட்டம் சிவக்குமாரின் பழைய பதிவை *மட்டும்* படித்தபின் மாலனின் இந்த பதிவை படித்து எழுதியது. பிறகுதான் பின்னூட்டமாய் மாலன் (pks pathivil)எழுதியதையும் சிவக்குமாரின் பதிலையும் படித்தேன். சிவக்குமாரின் பதில் அவரது வழக்கமான பாணி பதில். அது மாலனை நிச்சயம் புண்படுத்தியிருக்கும் என்பதும், அந்த பதிலின் நோக்கமாக அது பின்னிருப்பதும் புரிகிறது. ஆனாலும் அதை சொல்லும் உரிமை சிவக்குமாருக்கு இருப்பதையும், அதை இன்னமும் சூழலில் ஆரோக்கிய கேடாக என்னால் பார்க்க முடியாமல் இருப்பதையும் சொல்ல விரும்புகிறேன்.

இங்கே சூழ்நிலை எனக்கு கொஞ்சம் சுவாரசியமாக இருக்கிறது. பொதுவாய் என் போன்றவர்களின் *கருத்தை முன்வைத்த* தாக்குதலகளை தனிப்பட்ட தாக்குதல்களாய் திரித்து பேசுவது சிவக்குமாரின் வழக்கம், இங்கே அவருக்கு தர்ம அடி விழுந்துகொண்டிருக்கிறது. ஆனாலும் அவர் சொன்ன கருத்துக்களை சொல்ல அவருக்கு உரிமை இருப்பதையும் மனநோய்கூறாகவோ என்னால் இன்னமும் கூட பார்க்க முடியவில்லை என்று சொல்வதுதான் எனக்கு நேர்மையாய் தெரிகிறது, அதையே சொல்கிறேன் - இந்த நேர்மையை சிவக்குமார் எனக்கு எந்த கட்டத்திலும் காட்டமாட்டார் எனினும்.

இது இப்படியிருக்க மாலன் இந்த பதிவின் தொடக்கத்தில் சிறுப்பத்திரிகை சண்டையை முன்வைத்து வலைப்பதிவை ஒப்பிட்டு பேசியவை எல்லாம் க்ளிஷேயாகிப்போன புளித்து போன கருத்துக்கள். இது வரை பல சண்டைகள் கருத்துலகில் நடந்திருக்கிறது. அதிலிருந்து என்ன பாடத்தை கற்றுகொண்டு, எப்படி ஈகோவால் கிட்நாப் செய்யப்படாமல் ஆரோக்கியமான முறையில் சண்டைபோடலாம் என்று யோசிக்கலாம். தர்க்கம் என்பதிலேயே இருக்கும் அடிப்படை பிரச்சனைகள் குறித்து யோசிக்கலாம். ஆனால் அதையெல்லாம் விட்டுவிட்டு இன்னும் சண்டை போடுவதே சூழலுக்கு கேடு என்பது போன்ற கவைக்குதவாத கருத்துக்கள்தான் வந்து விழுகின்றன.

சிவக்குமார் என்ற ஒருவர் சொன்ன விஷயத்திற்காக வலைப்பதிவுகளையே குற்றம் சொல்வதும், புறக்கணிப்பது நியாயமானதாய் தெரியவில்லை. பொதுக்களத்தில் செய்லாற்ற வந்த பிறகு இவைகளை எதிர்கொள்வதே விவேகமானது. மௌனமாய், புறக்கணிப்பாய் கூட அதை செய்யலாம். ஏற்கனவே கருத்து சொல்லிவிட்டதால் மீண்டும் வந்து சொன்னேன், இதுவும் கருத்தின் அடிப்படையிலேயெ எழுதப்பட்டுள்ளது.

மற்றபடி எனக்கு மாலன் எடுத்த முடிவு வருந்தத் தக்கது. புண்படும்போது உதாசீனம் செய்து, தன்னை ஆதர்சமாய் நினைத்திருக்கும் (எனக்கு அல்ல) மற்றவர்களுக்கு உதாரணமாய் இருப்பதே சிறந்தது, அதையே வேண்டி கேட்டுகொள்கிறேன். நன்றி!

7:16 PM

 
Blogger -/பெயரிலி. said...

ரோசா வசந்தின் இரு பின்னூட்டங்களின் கருத்துகளிலேயும் எனக்கு முற்றாக உடன்பாடு. நன்றாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

9:19 PM

 
Anonymous Anonymous said...

திரு.மாலனுக்கு,வணக்கம்!எத்தனையோ வாசகர்கள் உங்களுக்காக தத்தம் ஆலோசனைகளை முன்வைக்கின்றனர்.இது சரியாகவா இருக்கிறது?
உங்களது இத்தனை நாள் அநுபவத்தை இவர்கள் கொச்சைப் படுத்துவதுபோன்று ஆலோசனை செய்கின்றார்கள்.ஒரு படைப்பாளிக்குத் தெரியும் தான் எங்கே நிற்பதென்று,இதை யாரும் அந்தப் படைப்பாளிக்குச் சொல்லிக்கொடுத்து வருவதல்ல.அவனது உள்ளொளியாற்றலால் அவன் -அவள் அதைப் பெறமுடியும்.எனவே தங்களை யாரும் கொச்சைப் படுத்தி விட முடியாது.நாம் இது குறித்தொரு வாதப் பரதிவாதம் வைக்காது அவரவர் ஊக்கத்துக்கேற்றவாறு சுதந்திரமாகச் செயற்பட அனுமதிப்பதே நல்நோக்கு.அதைவிடுத்து மாலன்-மாலனென ஒப்பாரி வைப்பது எதற்காக?நீங்களும் இவர்களின் கூத்தை அனுமதித்தபடி இரசிக்கிறபோக்கில் இவற்றை வேண்டி நிற்பது அழகாயில்லை!இந்த ஒப்பார இத்துடன் ஒழிக! திடமுடன் வாழ்வதே படைப்பாளியின் இருப்பாகும்,அது முடியாதுபோனால் படைப்பாளியென்பது வெறும் ஜடம்தாம்.
அன்புடன்
முத்து.

11:18 PM

 
Blogger Jayaprakash Sampath said...

அன்புள்ள மாலன் சார்,

இந்தச் சமயத்தில் எது சொன்னாலும், அது சம்பிரதாயமாகத்தான் காட்சி தரும். முதலில், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். மற்றவை பிறகு. அபாண்டமான அவதூறுகளுக்கு, எதிர்வினை கொடுத்து, அதற்கு ஒரு தனி அந்தஸ்து கொடுத்திருக்கத் தேவை இல்லை என்று நினைக்கிறேன்.

11:27 PM

 
Blogger Kasi Arumugam said...

ப்ளாக்கர் சொதப்பலில் தொங்கிபோனதை சரிசெய்திருக்கிறேன் (என்று நினைக்கிறேன்)

11:40 PM

 
Anonymous Anonymous said...

þ¨½Âõ ±ýÈ ¾¨¼¸ÇüÈ Á†¡¿¾¢Â¢ø ±¾¢÷òÐ ¿£óÐÅÐ ¾É¢¦Â¡Õ ¸¨Ä. «Ð Àò¾¢Ã¢¨¸ ¯Ä¸¢Ä¢ÕóÐ, «Ð×õ, ƒ¡øáìÜð¼í¸Ç¡É ¾Á¢ú¦Å̃Éô Àò¾¢Ã¢¨¸ ¯Ä¸¢Ä¢ÕóÐ Åó¾¢íÌ Ì¾¢ò¾ ¯í¸¨Çô §À¡ý§È¡÷ìÌì ¸ÊÉÁ¡¸ò¾¡ý þÕìÌõ.

¦ºýÚ Å¡Õí¸û. ¾í¸Ç¢ý þÕôÒõ þý¨ÁÔõ ¾Á¢Æ¢¨½Âò¾¢ø ¡¦¾¡Õ À¡¾¢ô¨ÀÔõ ²üÀÎò¾ô §À¡Å¾¢ø¨Ä. «Ð ¦ÀÕ¸¢ô À¢ÃŸ¢òÐì ¦¸¡ñξ¡É¢ÕìÌõ.

¦ºøžüÌ Óý, º¢ÅÌÁ¡÷ «Å÷¸Ç¢ý Ü÷¨ÁÂ¡É §¸ûŢ츨½¸ÙìÌô À¾¢ø «Ç¢òÐô §À¡É¡ø ¾í¸û ºÁ£Àò¾¢Â ¯¨¼¨ÁÂ¡É «ïº¡¨ÁìÌ «Æ¸¡Â¢ÕìÌõ.

12:14 AM

 
Anonymous Anonymous said...

அன்புள்ள மாலன் அவர்களுக்கு

நீங்கள் ஜெயகாந்தன் பற்றி எழுதியதையும், அதற்கும், உங்கள் படைப்புகள் மீதான ஆய்வுகள் குறித்தும் எழுதப்பட்ட சிவக்குமாரின் கருத்துக்களையும் படித்தேன். இங்கு பின்னூட்டமிட்டவர்களில் பெரும்பாலனவர்களின் கருத்துக்களுக்கும், சோனியா அரசியலை விட்டு விலகப் போகிறேன் என்று நாடகம் நடத்தும் பொழுது, அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் காங்கிரஸ் காரர்களுக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை. ஒரு சிலர் தவிர, விவாதத்தின் மையப் பகுதியைத் தொட்டதாகவே தெரியவில்லை. மாலன் மீதான பக்தி அல்லது சிவகுமார் மீதான வெறுப்பு இவை இரண்டில் ஒன்றே தெரிகின்றன. சிவக்குமார் உங்களிடம் எழுப்பிய வினாக்கள் என்ன?

உங்கள் படைப்புக்களின் மீதான ஆய்வுப் பார்வை முழுமையானதல்ல, முகஸ்துதி சார்ந்ததென்பது. அதற்கு முழுமையாக ஒத்துக் கொள்ள இயலாததெனினும் ஒரு சமாளிப்பான பதிலை வைத்துளீர்கள். ஆனால் அவ்வாறு சிவகுமார் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு உள்நோக்கம் கற்பித்தலில் தான் உங்கள் நிதானம் தவறி விட்டது. நீங்கள் சிவகுமாரின் மதிப்புக்குரிய ஜெயகாந்தனை விமர்சித்ததின் காரணமாகவே பதிலுக்கு உங்கள் படைப்பின் மீதான ஆய்வை குறை கூறியுள்ளார் என்பது நீங்கள் சொல்லும் குற்றசாட்டு. அது உண்மையாக்வே கூட இருந்து விட்டு போகட்டுமே. ஆனால் அவ்விதம் உங்கள் சுட்டு விரலை சிவக்குமார் மீது சுட்டிக் காட்டுமுன் மீது நான்கு விரல்களும் உங்களை சுட்டுவதைச் சற்றே உற்றுப் பாருங்கள்.

உங்களுக்கு மறந்திருக்கலாம். சென்ற வருடத்தில், உங்கள் முதலாளியான கருணாநிதியை ஒரு இலக்கியவாதி என்று தான் கருதவில்லை என்று ஜெயமோகன் கூறியவுடன், உங்களால் புனித பீடத்தில் வைத்து அர்ச்சிக்கப் படும் உங்கள் பார்வையில் மிகச்சிறந்த படைப்பாளியான கருணநிதி நடந்து கொண்ட விதம் என்ன? மிகக் கேவலாமான முறையில் தரம் தாழ்ந்து ஜெயமோகனைக் கபோதி என்றும், வானரம் என்றும் மனநோயாளி என்றும் நிந்தித்த கருணாநிதியை எத்துனை தன்மானமுள்ள முதுகெலும்புள்ள, சுய மரியாதை உள்ள எழுத்தாளர்கள் கண்டித்தார்கள்? அவரது ரவுடித்தனத்துக்குப் பயந்து கொண்டு அமைதி காத்தவர்களே அதிகம். ஆனால் அப்பொழுது நீங்கள் நடந்து கொண்ட விதம் என்ன? கருணாநிதியைக் கண்டிப்பதென்பது அவரிடம் சம்பளம் வாங்கும் உங்களால் இயலாதுதான். ஆனால் அவருடன் சேர்ந்து கொண்டு அல்லது அவரைத் திருப்திப் படுத்தும் விதமாக ஜெயமோகனைத் தரக்குறைவாக திசைகளில் கண்டனம் செய்தது நீங்கள்தானே? உங்களுக்குப் படியளக்கும் எஜாமானனை ஒரு இலக்கியவாதி அல்ல என்று சொன்னதேற்கே, ஜெயமோகனை நார் நாராகக் கிழிக்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது என்றால் தான் பெரிதும் மதிக்கும் ஒரு எழுத்தாளரை, மன நோயாளி என்று கீழ்த்தரமாக அழைக்கத் துணிந்த உங்களைக் கேள்வி கேட்கும் உரிமை சிவக்குமாருக்குக் கிடையாதா?

தொடரும்..

12:45 AM

 
Blogger Ganesh Gopalasubramanian said...

கண்டிப்பாக நீங்கள் இதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
மீண்டும் நீங்கள் எழுதத தொடங்கினாலும், குறைகளும் குற்றச்சாட்டுகளும் வரலாம்.
அதெல்லாம் just passing clouds.
உங்கள் வரவை எதிர்பார்க்கிறேன்.

1:31 AM

 
Anonymous Anonymous said...

அன்புள்ள மாலன் அவர்களுக்கு

தொடர்ச்சி...


முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ஐயா. ஒரு தரக்குறைவான, நாலாந்தரமான, கொக்கோக எழுத்தாளரன கருணாநிதியை ஜெயமோகன் விமர்சித்தன் காரணமாகக் கோபம் கொண்டு, அவர் மீது ஆறு வித்தியாசங்கள் என்று சேற்றை வாரி இறைத்தது தாங்கள்தானே? இப்பொழுது சிவக்குமாரின் வினாக்கள் உங்களுக்கு ஏன் தரம்தாழ்ந்தவையாகத் தோன்ற வேண்டும்? ஏன் இந்த இரட்டை வேடம்? அதே நேரத்தில் தமிழகத்தின் தலைச்சிறந்த, உலகப் புகழ் பெற்ற ஒரு எழுத்தாளரை அதுவும் ஞானபீட பரிசு பெற்ற இந்தத்தருணத்தில் நீங்கள் மனச் சிதைவுக்கு உள்ளானவர் என்று கடுமையாக நீங்கள் தாக்க வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி சிவக்குமாருக்கு மட்டுமல்ல எங்கள் எல்லோருக்குமே உண்டு. சிவக்குமாருக்கு நீங்கள் பதிலளிக்க வேண்டாம், மற்றவர்களுக்குப் பதில் அளிக்கலாமே? தமிழின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான ஜெயகாந்தன் எப்படி உங்களுக்கு மனநோயாளியாகத் தோன்றுகிறார் என்பதை குற்றசாட்டை எடுத்து வைத்த நீங்கள் விளக்கக் கடைமைப் பட்டுள்ளீர்கள். ஞானபீடப் பரிசுக்குத் தகுதி இல்லாதவர் ஜெயகாந்தன் என்ற ஒரு தெனியும் உங்கள் கட்டுரையில் இலிக்கிறது. அதற்கும் உங்களிடமிருந்து பதில் எதிர்பார்க்கிறோம். சிவக்குமார் எழுப்பியுள்ள வினாக்களில் எவ்விதக் கண்யக் குறைவும், தரக் குறைவும் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக ஒரு மரியாதைக் குரிய எழுத்தாளரை மனநோயாளி என்று அழைத்த உங்கள் வார்த்தைகள்தான் எனக்குத் தரக்குறைவாகப் படுகின்றன? ஜெயகாந்தன் கரகர ஷன்கர எழுதியதானேலேயே மனச்சிதைவுக்குள்ளானவர் என்றால், உங்களின் பெருமதிப்பிற்குரிய, ஆபாச எழுத்துக்களை மட்டுமே எழுத்த் தெரிந்த வக்கிர மனம் படைத்த அண்ணாத்துரையும், கருணாநிதியும் எவ்வாறு அழைக்கப் பட வேண்டும்? அவர்களை மனநோயாளிகள் என்று உங்களைப் போல் தரம் தாழ்ந்து அழைத்து மன நோயாளிகளைக் கேவலப் படுத்த விரும்பவில்லை. அவர்கள் மீது அனுதாபமும், அக்கறையும் எனக்குண்டு. ஜெயமோகனை மனநோயாளி என்று அழைத்த கருணாநிதிக்கு வக்காலத்து வாங்கும் உங்களிடமிருந்தும் அதே வார்த்தைகள் வருவதில் ஆச்சரியம் ஏதுமில்லைதான்.

கருணாநிதியைத் திருப்திப் படுத்த இவ்வாறு நீங்கள் ஜெயகாந்தனை அவதூறு செய்கிறீர்கள் என்று உங்கள் மீதும் குற்றம் சாட்டலாமே? அந்தக் குற்றசாட்டில் உண்மையில்லையெனில் சிவக்குமாரின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய தார்மீகக் கடமை உங்களுக்கு உண்டு. இது போல் சிறுபிள்ளை விளையாட்டு ஆடி அதில் இருந்து தப்பிக்க முயல்வது உங்களின் மீது விழுந்து விட்ட மேற்படி ஐயத்தை உறுதி செய்வதாகவே அமையும். ஓடி ஒளிவதால் யாருக்கும் பயனில்லை.

தமிழில் உங்களைப் போல் யாரும் எழுதியதில்லை என்று கூறியுள்ளீர்கள் ஓரளவுக்கு ஒத்துக் கொள்கிறேன். அதற்காக உங்கள் மீது பெருமதிப்பு உண்டு. உங்களின் கருனாநிதி மற்றும் திராவிட இயக்க ஆதரவு நிலைப்பட்டினையும் மீறி. ஆனல் உங்கள் பதிப்பாளரான கிழக்குப் பதிப்பகமே,உங்கள் நுல்களில் உங்களை ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்றுதானே அறிமுகப் படுத்துகிறது? சிறந்த எழுதாளர் என்று அறிமுகப் படுத்தவில்லையே? முதலில் அதை மாற்ற சொல்லுங்கள். அதைப் படிதுவிட்டு சிவக்குமாரும் சொல்லியிருப்பார் என்றால் அதில் தவறேதுமில்லையே.

நான் இங்கு என் பெயரைப் போடாததற்கு மன்னிக்கவும். ஏற்கனவே இங்கு எழுத்தை விட்டு விட்டு எழுதியவனை வசைபாடும் ஒரு ஜால்ராக் கும்பல் ஒன்று திரிகிறது. என் கேள்விகள் அலசப் படுவதற்குப் பதிலாக என் சட்டைக்குள் என்ன இருக்கிறது என்பது குறித்தும், இவன் சிவக்குமாரிடம் ஓசி காபி வாங்கிக் குடித்தவன் என்றும், ஓசி சிகரெட் வாங்கி ஊதியவன் என்றும் கீழ்த்தரமான திசை திருப்பும் முயற்சிகள் துவங்கி விடக்க்கூடிய ஆபத்துக்கள் இருப்பதனாலேயே என் பெயரைத் தவிர்த்திருக்கிறேன்.

மற்றபடி எனக்கு மாலன், சிவக்குமார் இருவரையும் இணையத்தில் மட்டுமே பரிச்யம். இருவரிடம் பச்சைத் தண்ணீர் கூட வாங்கிக் குடித்தது கிடையாது. இருவர் மீதும் மரியாதையும், இருவர் கருத்துக்களுடனும் ஒன்று பட்டத் தருணங்களும் வேறுபட்டத் தருணங்களும் உண்டு.

தொடரும்..

2:08 AM

 
Anonymous Anonymous said...

மாலனை ஒரு சிறந்த எழுத்தாளாராக முன்னிறுத்துவதை விட கிழக்குப் பதிப்பகம் ஒரு பத்திரிகையாளராகத்தான் முன்னிறுத்துகிறது. மாலனைச் சரியாக படித்திராத சிவகுமார் அவரை ஒரு செய்தியாளர் என்ற அளவில் மட்டுமே புரிந்து கொண்டிருந்தால் அதில் பெருத்த மன்னிக்க முடியாத தவறு ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

கிழக்கில் மாலன் பற்றிய அறிமுகங்கள் கீழே:



தமிழின் முக்கியமான பத்திரிகையாளர்களுள் ஒருவரான மாலனின் தேர்ந்தெடுத்த கட்டுரைத் தொகுப்பு. நமது சமூகம், நமது கலாசாரம், நமது அரசியல் என்று மாலன் அக்கறையுடன் விவாதிக்கும் விஷயங்கள் அனைத்துமே தமிழ்ச் சமூகத்தைச் சுற்றி வருவனதான். அவ்வகையில் இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் ஒரு காலகட்டத்தின் வரலாறும் கூட. தேர்ந்த வாசகர்கள் பொருட்படுத்தி விவாதிக்கத்தக்க நூல்.



எழுபதுகளின் முக்கியப் படைப்பாளிகளுள் ஒருவராகக் கருதப்படும் மாலன், அடிப்படையில் ஒரு பத்திரிகையாளர். சாவி, திசைகள், குமுதம், இந்தியா டுடே, குங்குமம், தினமணி என்று இவர் கடந்து வந்த பாதையை ஆராய்ந்தால், தமிழ்ப் பத்திரிகையுலக சரித்திரத்தின் சில முக்கியச் சுவடுகள் அகப்படும்

2:32 AM

 
Anonymous Anonymous said...

மாலனை கிழக்கு பதிப்பகம் தரும் அறிமுகத்தோடு இணைப்பதென்பது மிகக் குறுகிய பார்வை. கிழக்கு பதிப்பகம் தரும் அறிமுகம் தாண்டி மாலனுக்கு தனி அடையாளம் இருக்கிறது. மறுபடியும் மறுபடியும் மாலனின் பங்களிப்பை இணையத்துக்குள், இணைய வாசகர்களுக்குள் குறுக்குவது அறிவார்ந்த செயல் அல்ல. மாலனின் அரசியல் அடையாளம் ஒரு சிலருக்கு உறுத்துவதைப் போல, தண்டபாணி ஜெயகாந்தனின் அரசியல் அடையாளமும் மற்றவருக்கு உறுத்தத்தான் செய்கிறது. ஆனால் அது தாண்டி ஜெயகாந்தனை சிறந்த எழுத்தாளர் என்று ஒத்துக்கொள்ளும் பக்குவம் அவர்களுக்கு இருக்கிறது. அப்படி இல்லாமல் மாலனை தாக்கும் பொருட்டு அவர் பங்களிப்பை இணையத்தோடு, கிழக்கோடு, சன் டீவியோடு, ஜெ.மோ பற்றிய விமர்சன சாடல்களோடு குறுக்குவதன்/முடக்குவதன் மூலம் எதிர்தரப்பின், திறனாய்வு முலாம் பூசிக்கொண்டு சந்தைக்கு வந்து ஆடும்
வஞ்சகமுகம்தான் வெளிச்சத்துக்கு வருகிறது.

அறிவுஜீவிகள் பார்வையில்
மாலனின் "ஜால்ரா"

2:56 AM

 
Blogger இராதாகிருஷ்ணன் said...

சென்ற ஞாயிறன்னு கிடைத்த சிறிய அவகாசத்தில் படித்த பதிவுகளுள் ஒன்று சிவக்குமாருடையது. அதில் தனிமனிதத் தாக்குதல் இருந்ததை உணரமுடிந்தது. இருப்பினும், அதற்காக (மட்டுமா என்று தெரியாது) தங்களது இப்படியானதொரு முடிவு எதிர்பாராததும், வருத்தமளிப்பதுமாகும். வாசகர்களான எங்களின் வேண்டுகோளிற்காகவும் தொடர்ந்து எழுத முயற்சியுங்கள்.

3:41 AM

 
Anonymous Anonymous said...

will you stop writing in tamil if somebody ridicules you tomorrow in print.everyone is entitled to have their views and express them.so why make a big issue of what p.k.sivakumar wrote.

3:48 AM

 
Anonymous Anonymous said...

மாலனின் முடிவுவருத்தத்துக்குரியதுதான்.ஆனால் தீவிரப்படைப்பாளிகளுக்குத் தமிழிணையம் தொடர்ந்து அளித்துவரும் வெகுமதி இதுவேதான். முன்னர் இரா.முருகக்ன், பின்னார் பாரா, சொக்கன் போன்றவர்கள் இணையத்தை விட்டு விலகினார்கள். இப்போது மாலன். புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இணையத்துக்கு வரும்போது, அவர்களை மட்டம்தட்டி அதன்மூலம் தான் புகழ் பெறுவது என்பதை பி.கே.சிவகுமார் போன்ற சிலர் தொடர்ந்து செய்துவருகின்றார்கள்.வம்புகளில் ஆர்வம் இல்லாத படைப்பாளிகள் ஒதுங்கிக்கொள்வது இயல்பாகிவருகின்றது.இந்த இணைய தாதாக்கள் குட்டிக்கரணம் போட்டாலும் தமிழ் எழுத்துலகில் ஒரு சிறு புல்லைக்குடப் பிடுங்கிப்போட முடியாது. சுயமாக ஒரு கதையோ, கட்டுரையோ கவிதையோ எழுத வக்கில்லாதவர்கள், படைப்பாளிகளை காயப்படுத்தி அற்பசந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மனுஷ்யபுத்திரன் அவர்கள் வந்தபோதும் இதே தான் நடந்தது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.தமிழ் இணையம் வெறும் காட்டான்களின் கூடாரமாக உள்ளது. பதமடைந்து, பக்குவம் பெறா எப்படியும் இன்னும் பத்து வருடங்கள் ஆகும். அதுவரை படைப்பாளர்கள் இந்தப்பக்கம் வராதிருப்பதே நல்லது.

இவண்,
பொன். முருகேசன்

10:48 AM

 
Anonymous Anonymous said...

எழுத்தாளர்கள் எல்லோரும் இலக்கியவாதிகள்தான். எல்லா இலக்கியமும் தரம் மற்றும் தளத்தில் வேறுபடும் என்பதைத் தவிர. முதுபெரும் எழுத்தாளரும் அரசியல்வாதியுமான கருணாநிதியை இலக்கியவாதியே இல்லை என்பவர்கள் வாங்கிக்கட்டிக்கொள்வதைப் பற்றி யாரும் கவலை கொள்ளத்தேவை இல்லை.

சிவகுமார் இந்தப் பழக்க வழக்கங்களை அவர் தலைவரிடம்(ஜெ) இருந்துதான் கற்றுக்கொண்டிருப்பார் என்று தோன்றுகிறது. சமீபத்திய ஜுனியர் விகடன் செய்தி: கருணாநிதி வீட்டிலிருந்து பாதுகாப்பு அதிகாரி ஜெயகாந்தன் வீட்டுக்கு தொலைபேசியில் அழைத்திருக்கிறார். "உங்கள் வீட்டு முகவரி வேண்டும். கலைஞர் உங்கள் வீட்டுக்கு வந்து ஞானபீட விருதுக்கு வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறார்."

இதற்கு திரு.ஜெ வின் பதில்: "என் முகவரி தெரியாதா? உங்கள் தலைவரின் முகவரி என்ன? அவருக்கு முகவரி இருக்கிறதா?"

அந்த அதிகாரி ஏதோ சமாளித்துவிட்டு தொலைபேசியை வைத்து விட்டாராம். மாலன் நீங்கள் எல்லாம் எந்த மூலைக்கு?

இலக்கியவாதி ஆவது இரண்டாம் பட்சம். மனிதனாக மனிதனேயத்துடன் வாழ்வது முதல்.

11:06 AM

 
Blogger -/பெயரிலி. said...

This comment has been removed by a blog administrator.

11:15 AM

 
Anonymous Anonymous said...

//இது போல் சிறுபிள்ளை விளையாட்டு ஆடி அதில் இருந்து தப்பிக்க முயல்வது உங்களின் மீது விழுந்து விட்ட மேற்படி ஐயத்தை உறுதி செய்வதாகவே அமையும். ஓடி ஒளிவதால் யாருக்கும் பயனில்லை.//

11:48 AM

 
Blogger ஈழநாதன்(Eelanathan) said...

அன்பின் மாலன் அவர்களுக்கு.இருதடவை பின்னூட்டமிட முயன்று தோற்றுப்போய் இருந்துவிட்டேன் இப்போது எழுதுகிறேன்.

நீங்கள் கூறியபடியும் இலக்கியச் சண்டையும் தனிமனித தாக்குதலும் எழுத்து காலத்திலிருந்தே இலக்கியவாதிகளுடன் வருவதாக படித்தபடியும் இது தமிழ் இலக்கிய உலகிற்குப் புதிதல்ல என்று தெரிகின்றது.
சிறு பத்திரிகைகள்,இணையம்,குழுமம் என்று பரவி இன்று வலைப்பதிவுகளுக்குள்ளும் இந்தச் சண்டைகள் வந்து நிற்கின்றன.இதை வைத்து ஒட்டுமொத்த வலைப்பதிவுகளையும் குறை சொல்வதில் நியாயமில்லை.எங்குதான் இல்லை சண்டை என்று வாளவிருப்பதே மேல்.உங்களுக்கு தமிழிலக்கிய உலகில் உள்ள இடம் சிறிதோ பெரியதோ யாராலும் மறுக்கப்படமுடியாத ஒன்று.புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.

4:11 PM

 
Blogger Sri Rangan said...

Dear Malan,For many people life is like bad weather. They seek shelter and wait until it is over,If you want to achieve something you must throw in your whole self.

Regards
P.V.Sri Rangan

7:07 PM

 
Blogger வீ. எம் said...

திரு மாலன் அவர்களே ,
வலைப்பூவில் வெகு சமீபத்தில் சேர்ந்தவன் நான். சேர்ந்த மறுநாள் மாலனும் வலைப்பூவில் எழுதுகிறார் என்று தெரிந்த போது மிக்க மகிழ்ந்து போனேன்.. ஆனால் அது ஒரு நாள் மட்டுமே நீடித்தது..
மறுநாளே அவர் இப்போது எழுதுவதில்லை , சில காரணங்களுக்காக விலகி விட்டார் என்று தெரியவந்து வேதனை அடைந்தேன்..
தங்களின் பதிவுகளை படித்தேன்..

நீங்கள் மீண்டும் வருவீர்கள் என்று நம்புகிறோம்..காத்திருபோம்..
நன்றி
வீ எம்

2:12 PM

 
Anonymous Anonymous said...

நீ என்ன பெரிய மயிரா? போறதெண்டா போபம். நின்று பிலிம்காட்டுறியா? பேடிப்பயலுவ ஓடீ ஒளியிற்து புதிதா? நீ சொல்லும்போது எல்லாரும் கேட்கனும். மற்றவன் உன்னபற்றி சொன்னா உனக்கு கோள்வம் வருதா?

5:25 PM

 
Blogger Chellamuthu Kuppusamy said...

ஐயா வணக்கம்.

//இணையம் என்பது ஒரு சிறு வெளி. அதில் இருப்பவர்கள் இணையத்தை மட்டும் படிப்பவர்கள் அல்ல. வெளி உலகப் பழக்கமும் உள்ளவர்கள். அவர்கள் என்னை அவற்றின் மூலம் ஏற்கனவே அறிந்தவர்கள்தான். எனவே எனக்கு பிம்பங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை// இதனை எவருமே மறுக்க இயலாது. மாலன் இணையத்தில் எழுதுகிறார் என்பதே எனக்கு சில வாரங்கள் முன்பு தான் தெரிந்தது, மற்றபடி எழுத்தாளராக, பத்திரைக்கையாளராகத் தான் இத்தனை நாளும் என்னால் அறியப்பட்டிருந்தீர்கள் அய்யா.

உங்களைப் பற்றி உயர்வாகவோ, சாடியோ, வெறெப்படியோவெல்லாம் எழுதினால் பரபரப்பை ஏற்படுத்தி விடலாம் என்பது கூடச் சிலரது நோக்கமாக இருக்கலாம். மற்றபடி மேற்சொன்ன நபருக்கு எதிரான வாதமாக இதனை வெளியிடவில்லை நான்; ஏனென்றால் அதனை படித்திடவே இல்லை. நாணயம் விகடனில் வெளிவந்த பரஸ்பர நிதி (mutual fund) குறித்தான தொடரின் தொடக்கத்தை விமர்சித்து எழுதக் காரணம், அதில் வெளியிடப்பட்ட அபத்தத்தை படித்ததில் எனக்குள் எழுந்த கோபத்தின் அதே அளவு, "நாம் சொல்வதை ஏனையோருக்கு எடுத்துச் செல்லும் பரபரப்பை ஏற்படுத்தி விடவேண்டும்" என்கிற ஆவலும் தான். 'விட்டு விலகிச் செல்லாதீர்கள்' எனப் பிறரைப் போலவே நானும் இங்கு வந்து பின்னூட்டமிடக் காரணம் என்னை ஏனையோருக்கு அடையாளப் படுத்திக் கொள்ளும் முயற்சியே. வெளியேறும் உங்களைத் தடுக்கின்ற சாக்கில் தன் பெயரை வெளிப்படுத்தவும் ஒரு முயற்சி தான் இங்கே பெரும்பாலானோர் செய்திருப்பது. வெட்கமின்றி இதனைச் சொல்ல பயமில்லாமல் இருப்பதற்கு, இலக்கிய அல்லது வெகுஜனப் படைப்பாளியாகச் சாதிப்பது போன்ற குறிக்கோள்கள் ஏதுமில்லாமலிருப்பது தான் மூலம். ஆனால் இத்தகு விளம்பரம் ஏதும் தேவையற்ற தாங்கள், "தயவு செய்து இது போன்றதொரு முடிவிற்குச் சென்று விட வேண்டாம்" என்பது எனது விண்ணப்பம். அதை மறுப்பதும் ஏற்ற்குக் கொள்வதும் உங்களது ஜீவாதார உரிமை. எம்.கே.குமார் சொன்னது போல "இந்த பிரிவு மற்ற சில ஆக்கபூர்வ விஷயங்களுக்கு உங்களுக்கு உதவுமாயின் சென்று வாருங்கள்" அய்யா. வலைகளில் கிடைக்கப் பெறும் பதிவுகளில் தரம், அவற்றிற்கான பதிவுகளின் ஒழுங்கு குறித்த தங்களது வருத்தமும் கோபமும் நியாயமானது.

இன்னுமொரு கோணம்... மிக அவசியமான பார்வையோடு கூடிய கருத்து என்றாலும் தன்னிலை விளக்கமாகவும், உங்கள் தகுதிக்குத் தேவையற்றதுமாகவுவே பெருமளவில் இதனைக் கருதுகிறேன். எனது நிலைப்பாட்டைத் தவறானதாக நீங்கள் கருதமாட்டீர்கள் என்பதாலும், அடிப்படையில் நீங்களும் ஒரு விமர்சகர் எனும் துணிச்சலிலாலும் இதனை மொழிகிறேன்.

-குப்புசாமி செல்லமுத்து

9:16 PM

 

Post a Comment

<< Home

 
Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது