வலைபூக்களால் தூக்கம் போச்சு!
பதிவுகளில் எதைப்பற்றியெல்லாம் எழுதலாம் என்று நட்சத்திரப் பதிவாளர் அருணா தனது பதிவில் தந்துள்ள பட்டியலில் இன்னொன்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். பதிவுகளில் பதிவுகளைப்பற்றியும் பதியலாம்!
பின்னூட்டங்கள் பற்றி ஒரு வார்த்தை: ஒரு சாதாரண மனிதனுக்கு இணையத்தில் சொந்த வேலைகளைப் பார்க்கக் கிடைக்கிற நேரம் அதிக பட்சமாக மூன்று மணி நேரம். அலுவலகம் போகும் வரும் நேரத்தையும் சேர்த்து ஒரு பத்துமணி நேரம் வேலையில் போய்விடுகிறது. தூங்குவதில் 8 மணிநேரம். மீதமிருக்கும் 6 மணி நேரத்தில் உடல், மன ஆரோக்கியத்திற்காக (நடை, படிப்பு, குளியல் போன்ற சொந்த hygiene விஷயங்களுக்காக இரண்டு, மூன்று மணி நேரம் தேவைப்படுகிறது) மீதமுள்ள மூன்று மணி நேரத்தில்தான் இணையம் உள்பட பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது. இந்த மூன்று மணி நேரத்தை நான் Goldern 180 என்று சொல்வதுண்டு. தூங்குவதைக் குறைத்துக் கொண்டால் இதை நீட்டிக்கலாம்தான். ஆனால் ஒரு இரவு ஒரு மணிநேரம் தூங்குவதைத் தள்ளிப் போட்டால் மறுநாள் அந்த ஒருமணி நேரத்தை எப்படியாவது உடல் கேட்டு வாங்கிக் கொண்டு விடுகிறது.
குடும்ப உறவுகள், நட்பு வட்டம் இவற்றைப் பேண சில சமயம் இந்த 3 மணி நேரத்தைக்கூட விட்டுக் கொடுக்க வேண்டி வந்து விடும்.
ஆனால் இந்த golden 180ல்தான் பலர் பல அற்புதங்களை செய்கிறார்கள். காசி தமிழ்மணத்தை ஒரு குழந்தை போல் பேணி தினம் தினம் அதை விதவிதமாக அலங்கரித்துப் பார்க்கிறார். சுரதா எழுத்துரு மாற்றி செய்து தருகிறார்.மதி படிக்கிறார், படம் பார்க்கிறார், எழுதுகிறார். பா.ராகவன் தலையணை தலையணையாக உலக அரசியல் சரித்திரம் எழுதுகிறார். வெங்கடேஷ் நேசமுடன் மடல் வரைகிறார்.மனுஷ்யபுத்ரன் கவிதைகள் புனைகிறார். அருண் வைத்தியநாதன் குறும்படம் தயாரிக்கிறார். சுபா கணினி, சங்கீதம், பயணம், புகைப்படம், மரபு அறக்கட்டளை, ஆரக்கிள், பி.எச்டி என்று ஏழெட்டு வேலைகள் செய்கிறார். இன்னும் பலர் என்னென்னவோ செய்கிறார்கள்.
இதில்தான் கொஞ்சம் நேரம் எடுத்துக் கொண்டு வலைப் பதிவில் எழுதுகிறார்கள். பின்னூட்டம் இடுகிறார்கள்.
எழுதுவதன் நோக்கம் திசைகளின் நோக்கம்தான் அதாவது "அறிதல் ஆக்கல் பகிர்தல்". ஆக்கத்திற்கும் பகிர்விற்கும் முதுகில் சின்னதாக ஒரு ஷொட்டு அல்லது தலையில் ஒரு குட்டு கிடைத்தால் நன்றாகத்தான் இருக்கிறது. கிடைக்காவிட்டால் ஏமாற்றம் ஏற்படுகிறது.அது மனித சுபாவம்.
ஆனால் சில சமயங்களில் பின்னூட்டங்கள் வெறும் அரட்டைக் கச்சேரியாகப் போய்விடுகின்றன. அசோகமித்ரன் என்ற எழுத்தாளர் 50 ஆண்டுகளை எழுத்துலகில் நிறைவு செய்ததை ஒட்டி ஒரு விழா. தமிழின் 'சிந்தனை டாங்கிகள்' (donkeyகள் அல்ல, tanks) பேசுகிறார்கள். அதை ரிபோர்ட் செய்து பத்ரி எழுதுகிறார். ஆனால் பத்ரி அணிந்து வந்தது அரைக்கால் சட்டையா முழுக்கால் சட்டையா, அது அரைக்காலா, அரைக்கையா இப்படித் திரும்பிவிடுகிறது பின்னூட்டங்கள்! அசோகமித்ரனின் 50 ஆண்டுகள், அரை நொடியில் காணாமல் போய்விடுகிறது. குறைந்த பட்சம் அவர் சோக மித்ரனா அல்லது அ-சோக மித்ரனா என்று தனிப்பட ஆராய்ந்தால் கூடப் பரவாயில்லை. இது ஓர் உதாரணம்தான்.
இது போன்ற பின்னூட்டங்களைப் படிக்கும் போது, ம்...கொடுத்து வைத்த மகராஜன்கள்/ மகராணிகள், எங்கிருந்துதான் இவர்களுக்கு நேரம் கிடைக்கிறதோ என்று மிட்டாய்க்கடையைப் பார்த்த பிச்சைக்காரக் குழந்தை மாதிரி ஏக்கப் பெருமூச்சு விட்டுக் கொண்டு நகர்ந்து விடுவேன்.
இந்த மாதிரி ஒவ்வொருவருக்கு ஒரு காரணம் இருக்கும். எனவே பின்னூட்டம் இல்லாத பதிவெல்லாம் படிக்கப்படாத பதிவுகள் என்றெண்ணிச் சோர்ந்து விட வேண்டாம்.
மற்றெந்த மொழி வலைப்பதிவுகளைக் காட்டிலும் தமிழ் வலைப்பதிவுகளுக்கு சில தனிப்பட்ட சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. அவற்றிலொன்று அவையெல்லாம் ஒரே இடத்தில் திரட்டப்படுவது. அதனால் அநேகமாக எழுதப்படுவதெல்லாம் படிக்கப்படுகின்றன.
400வது பதிவாக காசி தனது பதிவை ஆரம்பித்தபோது எல்லோரும் ஏக மனதாக சீக்கிரமே 1000வது பதிவு வரட்டும் என்று ஆசீர்வதித்தார்கள். 1000 பதிவு வந்து அதில் பாதி அளவாவது தினமும் எழுதப்பட்டால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்.
Golden 180 போதாது. எனவே-
தூக்கம் போச்சு!